காலாவதியான வாக்குறுதி!வாணியம்பாடி ரயில்வே மேம்பாலத்துக்காக போராட்டம்!

காலாவதியான வாக்குறுதி!வாணியம்பாடி ரயில்வே மேம்பாலத்துக்காக போராட்டம்!

 ஜி.கே.சேகரன்,

  வாணியம்பாடி - நியூடவுன் இடையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலத்தை அமைக்க தரக்கோரி வாணியம்பாடி தொழில் வணிகர்களின் பேரமைப்பு சார்பில் ஒரு நாள் கடை அடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-  நியூ டவுன் இடையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலத்தை அமைக்க தரக்கோரி வாணியம்பாடி தொழில் வணிகர்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடை அடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   வாணியம்பாடி அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், அனைத்து காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், முக்கிய கடை வீதிகள் எல்லாம் வாணியம்பாடி நகர பகுதியிலும், நியூடவுன் பகுதியில் கல்வி நிலையங்கள், நகராட்சி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அமைந்துள்ளது.

 இதனால் நாள்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள்பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள், அதிகாரிகள், நோயாளிகள் ஆகியோர் ரயில்வே கேட் கடந்து செல்ல வேண்டிய நிலையாக உள்ளது.

 நியூடவுன் ரயில்வே கேட் வழியாக சென்னை பெங்களூர், சென்னை கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல ரயில்வே பாதை அமைந்து இருப்பதால் நாள்தோறும் சுமார் 150 க்கு மேற்பட்ட ரயில்கள் இவ்வழியாக கடந்து செல்கிறது.

 ஆகவே ரயில்வே கேட் அடிக்கடி மூடிப்பட்டு குறைந்தது 5, 6 ரயில்கள் கடந்து சென்ற பிறகு கேட் திறக்கப்படுவதால் பொதுக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 நியூடவுன் ரயில்வே கேட் அடிக்கடி  மூடப்படுவதலும், ரயில்வே கேட் பழுதாகி வருவதாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 எனவே, நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாணியம்பாடி பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் அந்த கோரிக்கை நிறைவேறவில்லை. 2019 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் அப்போதைய திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், தன்னை வெற்றி பெற வைத்தால் நியூடவுன் மேம்பாலத்தை கட்டிதருவேன் என்று வாக்குறுதி தந்தார்.

 மக்களும் அவரை எம்.பியாக தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஐந்தாண்டு முடியும் தருவாயிலும் அவர் அந்த பாலத்தை கட்டித்தரவில்லை.

  இந்நிலையில், நீண்ட ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று  வாணியம்பாடி தொழில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று (ஜன-23) காலை 9 மணி முதல் பிற்பகல்  1 மணி வரை முழு கடையடைப்பு மற்றும்  கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்  நடைபெற்றது.

  ஆர்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம், வட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து மேம்பாலம் விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மேம்பாலம் கட்டும் பணி தொடங்கும் வரை 2 ரயில்கள் கடந்து சென்ற பிறகு உடனடியாக ரயில்வே கேட் திறக்கப்பட வேண்டும், ஒரு மாதத்திற்குள் மேம்பாலம் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் தவறும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் உடன் ரயில் மறியல் போராட்டமும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.