அதிமுக கூட்டணியில் அதிக சீட்டு கேட்டு டிமாண்ட் வைக்கும் தேமுதிக! ஜவ்வுமிட்டாய் கணக்காய் இழுக்கும் பேச்சுவார்த்தை!

அதிமுக கூட்டணியில் அதிக சீட்டு கேட்டு டிமாண்ட் வைக்கும் தேமுதிக! ஜவ்வுமிட்டாய் கணக்காய் இழுக்கும் பேச்சுவார்த்தை!

  ம.பா.கெஜராஜ்,

 மக்களவை தேர்தல் அறிவிப்பு நெருங்கும் நிலையில் திமுகவும், பாஜகவும் தங்கள் பணிகளை தொடங்கிவிட்டது. ஆனால் அதிமுக இன்னமும் நொண்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு கூட்டணி அமைக்க பெரிய அளவில் டிமாண்டுகள் வைக்கப்படுதாம். அதிலும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை ஜவ்வுமிட்டாய் கணக்காய் இழுத்துக் கொண்டிருப்பதால் அதிமுக வுக்கு குடைச்சலாக இருக்கிறது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் என்.டி.ஏ.கூட்டணியில் இணைவதாக கூறிய தேமுதிக அப்போதும் இப்படித்தான் ரொம்ப ஓவராக பந்தா காட்டினர்.

  குறிப்பாக கூட்டணி தலைவர்களை ஒரே மேடையில் சந்திக்க ஏற்பாடாகி, மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அதற்காக அமைக்கப்பட்ட மேடையில், கூட்டணி கட்சியின் தலைவர்கள் படங்கள் இடம்பெற்றிருந்தன. அதை தொலைக்காட்சியில் பார்த்த தேமுதிகவினர் எங்களை கேட்காமல் எப்படி கேப்டன் படத்தை வைக்கலாம் என்று குடைச்சல் கொடுத்ததினால் அந்த படம் அகற்றப்பட்டது.

 அந்த அளவுக்கு டிமாண்ட் செய்த அவர்கள் பின்னர் சுறுண்டு விட்டனர். 

  இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த், 14 லோக் சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என இம்முறை புறப்பட்டார்.  ஏற்கனவே தேமுதி விடம் பாடம் கற்ற அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தாமல் விட்டுவிட்டன. 

  பின்னர் ஒருவழியாக அதிமுக தரப்பில் பாமக மற்றும் தேமுதிகவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக  செய்திகள் வெளியாகிவருகின்றன. இதில்  தேமுதிகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்றும் அதேபோல் ராஜ்ய சபா சீட்டும் தரமுடியாது என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே தேமுதிக போட்டியிட விருப்பம் உள்ள தொகுதிகள் 7 ஐ குறிப்பிட்டனர். அதில் மதுரை கள்ளக்குறிச்சி ஆகியவை அடக்கம். ராஜ்யசபா பதவியும் வேண்டும் என்று தெரிவித்தனர்.

 ஆனால், 7 தொகுதிகள் வழங்க முடியாது என்றும் 3 மக்களவை தொகுதிகள்தான் வழங்கப்படும் என்றும் அதிமுக, ராஜ்ய சபா சீட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம்.

  மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய மொத்தம் 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதிமுகவில் ஓபிஎஸை தவிர்த்து மொத்தம் 62 எம்எல்ஏக்கள் உள்ளனர்.பாமகவுடன் கூட்டணி வைத்து அவர்களின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றாலும் மொத்தம் 67 எம்எல்ஏக்கள் தான் இருப்பார்கள். இதனால் 2 ராஜ்ய சபா சீட்டை கூட பெற முடியாது. இந்நிலையில் பாமகவும் தேமுதிகவும் ராஜ்ய சபா சீட்டுக்கு போட்டி போட்டு வருவதால் அதிமுக கூட்டணியில் இழுபறி நிலவி வருகிறது.

 மேலும் மதுரை தொகுதியில் அதிமுகவின் முன்னணி நிர்வாகி ஒருவரின் மகன் போட்டியிட உள்ளதால் மதுரை தொகுதியை தேமுதிகவுக்கு வழங்குவது கடினம் என தெரிவித்தாகவும் அதேநேரத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் தொகுதிகளை தேமுதிகவுக்கு வழங்க தயார் என தெரிவித்ததாம் அதிமுக.

 ஆனால் ராஜ்ய சபா சீட் கொடுத்தே ஆகவேண்டும் என தேமுதிக பிடிவாதமாக உள்ளதால், இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.

 ஆக தேமுதிகவின் நிலை கடந்த 2019 மக்களவை தேர்தல் போல ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயம்.