வாங்கம்மா... வாங்க சார்...பல மாநில கட்சிகளை கூவி கூவி அழைக்கும் உத்தவ்தாக்கரே!

ஜார்ஜ்.ரவி,
மராட்டிய முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வசமிருந்த சிவசேனாவையும், அதன் சின்னத்தையும் பறிபோக வைத்தது சாட்சாத் பா.ஜ.க.தான் என்று நம்பும் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் வாங்கம்மா... வாங்க சார் என்று கூவி கூவி அழைத்து வருகிறார்.
பா.ஜ.க.வுக்கு எதிராக தனித்தனியாக போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என அவர் சிவசேனா கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் கூப்பாடு போட்டிருக்கிறார்.
அதில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற யுக்தியை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பா.ஜனதாவின் போலி தேசியவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் விஷத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் பா.ஜ.க.வுடன் தனித்தனியாக போராடி வருகின்றனர்.
இதுபோன்ற அரசியல் அணுகுமுறைக்கு எந்த அர்த்தமும் இல்லை. காங்கிரசை வெறுத்து ஒதுக்கிவிட்டு பா.ஜ.க.வை எதிர்த்து எப்படி போராடுவீர்கள்?. 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து பின்னர் சிந்திக்கவேண்டும். அதற்கு முன்பு பா.ஜக.வுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்தாலோசித்து தங்களின் வியூகத்தை இறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும். பணமும் அதிகார ஆணவமும் இன்றைய ஆட்சியாளர்களின் கைகளில் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன.
நாடு தழுவிய அளவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டதன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலிமையான மற்றும் முதிர்ச்சி பெற்ற தலைவராக உருவெடுத்துள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி- கவுதம் அதானியின் தொடர்பு குறித்து ராகுல் காந்தி மக்களவையில் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்து பேசும்போது, பிரதமர் பதில் சொல்ல முடியாமல் பலமுறை தண்ணீர் குடித்ததை பார்க்க முடிந்தது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியும் என்பது தான் இதற்கு அர்த்தம் என்று சாம்னா வெளுத்து வாங்கியிருக்கிறது.