மீண்டும் இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்தம்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் படை இடையேயான போர் துவங்கிய நிலையில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்லேற்படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனை மேலும் 2 நாள் நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 7-ம் தேதி நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 240 பேர் பணயக் கைதிகளாக பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 7 வாரங்களாக பாலஸ்தீனத்தின் வடக்கு காசா மீது இஸ்ரேல் ராணுவம் தரைவழி மற்றும் வான்வழி ஏவுகணை, டிரோன், வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வந்தது. இதில் 13,300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளின் முயற்சியால், 48 நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேல்-ஹமாஸ் படை 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்பு கொண்டன. இதன்படி, சிறைபிடித்துள்ள 240 பணயக் கைதிகளில் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் படை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இரு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் முதலில் விடுவிக்கப்படுவார்கள் என ஒப்பந்தமானது.
முதல் கட்டமாக, கடந்த வெள்ளிக்கிழமை 14 இஸ்ரேல், 10 தாய்லாந்து மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டினர் என மொத்தம் 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேலும் சிறையில் வைத்திருந்த 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது.
2வது கட்டமாக சனிக்கிழமை 13 இஸ்ரேல், 4 தாய்லாந்து உள்பட 17 பேரும், 3வது கட்டமாக நேற்று முன்தினம் 14 இஸ்ரேல், 3 தாய்லாந்து என 17 பேர் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலும் 2வது மற்றும் 3வது கட்டங்களில் தலா 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கடைசி நாளான நேற்றுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா அல்லது நீட்டிக்கப்படுமா என்று உலக நாடுகள் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளன. ஒவ்வொரு 10 பணயக்கைதிகள் கூடுதலாக விடுவிக்கப்படும் நிலையில், போர் நிறுத்தம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்படியிருக்க தற்காலிக போர் நிறுத்தத்தின் 4 வது நாளான நேற்று, இன்னும் 2 முதல் 4 நாட்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் படை விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் பல பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.