காவிரி நீர் பிரச்சனை! கர்நாடகவின் கோரிக்கையை ஏற்காத ஒழுங்காற்றுக் குழு!!

ம.பா.கெஜராஜ்,
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது. இடையில் பிப்ரவரி மாதம் மட்டும் 10 நாட்களுக்கு சம்பா, தாளடி சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை கோடைக் காலத்தை முன்னிட்டு குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 96- வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்ப வல்லுனர் சுப்பிரமணியன் உள்ளிட்ட் அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு சார்பில், "தமிழ்நாட்டுக்கு மே மாதம் வரை கர்நாடகா தர வேண்டிய 10 டிஎம்சி நீரில் 3.8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. மீதமுள்ள 6.2 டிஎம்சி தண்ணீரை திறக்கவும், ஜூன் மாதம் தர வேண்டிய 9.17 டிஎம்சி தண்ணீரையும் தவறாமல் தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் கர்நாடகா அரசு சார்பில், "அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது" என்று வலியுறுத்தினர்.
அப்படியிருக்க கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த ஒழுங்காற்று குழு, காவிரியில் இருந்து மே மாதத்தில் தர வேண்டிய 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காணொளி வாயிலாக தமிழக அதிகாரிகள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
மாநில அரசுக்கு காவிரி நீர் பெற்றுக் கொடுப்பதற்காக அதிகாரிகளை நேரில் அனுப்பியிருக்க வேண்டும் என்று கூறினார்.