சரக்கு ஆட்டோவில் மாடுகள் கடத்தல்!

கு.அசோக்,
வேலூர் சத்துவாச்சாரியில் மாடுகளை சரக்கு ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக சத்துவாச்சாரி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. இந்த நிலையில் சத்துவாச்சாரி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் பகுதி, நேதாஜி நகர், முல்லை நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றிதிரிகின்றன.
நள்ளிரவு நேரத்தில் அந்த மாடுகள் தெருக்களில் படுத்து தூங்குகிறது. இதை நோட்டமிடும் மர்மநபர்கள் சரக்கு ஆட்டோவில் வந்து திடீரென அந்த மாடுகளை ஆட்டோவில் தூக்கிப்போட்டு கடத்திச் செல்வதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.