2 ஆயிரம் ரூபாய் புது நோட்டு விவகாரத்தில் சேகர் ரெட்டி மீதான வழக்கு ரத்து?!!

டி.முகமது இர்பான்,
கடந்த 2016 ஆம் ஆண்டு, மத்திய அரசு 1000 ரூபாய் நோட்டை மதிப்பிழப்பு செய்து அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான 24 நாட்களில் 34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக பெரிய அளவில் செய்திகள் வெளியானது.
சேகர் ரெட்டி, அவரது உறவினர் மற்றும் ஆடிட்டர் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் 147 கோடி ரூபாய்க்கு பழைய 500, 1000 நோட்டுகள், புதிய 2000 நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இத்துடன் 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த சோதனையின் போது, மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவித்த 24 நாட்களில் 34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் -பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பேரில், சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க உத்தரவிடுமாறு சேகர் ரெட்டி தரப்பில் மனு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆகவே சேகர் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.