லஞ்சம் பெருகிடுச்சு.. வழக்கு குறைந்துவிட்டது! எல்லாம் ஆன் லைன் மயமே காரணம்!

ம.பா.கெஜராஜ்,
டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதால் அதன் மூலமாகவே லஞ்ச பணம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அரசு அலுவலகத்தில் வைத்தோ அல்லது வெளி இடங்களில் வைத்தோ லஞ்சம் வாங்கினால் ஆபத்து என நினைத்து ஆன்லைன் மூலமாக பணத்தை சில அதிகாரிகள் பெறுகிறார்கள். ஆனால் கைது ஆவர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
ஆக அரசு அலுவலர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமே லஞ்ச பணத்தை பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இப்படியே போனால் எதிர் காலத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கையும் களவுமாக பிடிக்க முடியாத நிலை உருவாகும்.
இது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பெரிய சவாலாகவே மாறியிருக்கிறது. இதன் காரணமாக லஞ்ச வழக்குகளும் குறைய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை இந்த ஆண்டில் மே மாதம் வரையில் மொத்தம் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பல்லாவரத்தில் மட்டும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில் லஞ்ச புகார்கள் தொடர்பாக 74 வழக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னையில் 2020-ல் 67 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 44 வழக்குகளும், 2022-ல் 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேகம் எடுக்கும் முன்பு ஆண்டு தோறும் 250 வழக்குகள் வரை பதிவாகின. இதில் சுமார் 120 வழக்குகள் வரையில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட வழக்குகள் ஆகும்.
நடப்பாண்டில் இதுவரையில் தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் எந்த லஞ்ச வழக்குகளும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் வடக்கு மண்டலத்துக்குட் பட்ட கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடலூரில் அதிகபட்சமாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதே போல மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அளவிலான வழக்குகளே பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பம் இல்லாத ஒருவர் புகார் அளிக்கும் பட்சத்தில், லஞ்சம் கேட்கும் நபரிடம் அவரை பேச சொல்லி அது தொடர்பான ஆடியோவை பதிவு செய்து வைத்துக் கொள்ள முதலில் அறிவுறுத்துவோம். பின்னர் லஞ்சமாக கொடுக்கும் பணத்தில் ரசாயன பவுடரான ஃபினாப்திலினை தடவி கொடுத்து அந்த பணத்தையே லஞ்சம் கேட்கும் நபரிடம் கொடுக்கச் சொல்லி கையும் களவுமாக பிடித்து கைது செய்வோம்.
இந்த முறையில் லஞ்சம் வாங்கும் நபருக்கு தண்டனை வாங்கி கொடுப்பது எளிதாக இருக்கும்.
ஆனால் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக லஞ்சம் வாங்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் வேலை பளு கூடியிருக்கிறது.
இஇருந்த போதும் ஆன் லைன் பண வர்த்தனையை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறோம்.மிருந்தாலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, ஆனால் கைது வழக்கு என்பது குறைந்து வருகிறது என்றார்.