ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியே ஆகனும்! பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு!

ம.பா.கெஜராஜ்,
ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியே ஆகனும் என்கிற நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக தென் மாவட்ட மக்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்கிற பெயரில் பெண்களின் அரை நிர்வாண குத்தாட்டமும், ஆபாச சைககள் கொண்ட ஆட்டங்களும் நடத்தப்படுவது கலாச்சாரமாகவே இருந்து வந்தது.
இதனால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை எழுந்தது. இருப்பினும் இந்த வகை நடனத்துக்கு ஆதரவும் கூடவே எதிர்ப்பு இருந்தன.
இது போன்ற குழப்பமான சூழலால் காவல் துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை. சில இடங்களில் மாமுல் பெற்றுக் கொண்டு அனுமதித்தனர்.
இதை மையப்படுத்தி கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி விடுமுறை கால நீதிமன்றத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதில், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. என குறிப்பிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூறுகையில், இரு ஜாதியினர் இடையேவோ அல்லது இரு தரப்பினர் இடையேயோ பிரச்சனைகள் இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம்.
ஆனால் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடுவது தவறு என கூற முடியாது. இதனை இந்த நீதிமன்றம் ஏற்காது.
திருவிழாக்கள் என்பது வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழாக்களின் போது ஒலிபெருக்கிகள் வைப்பதற்கும், மின் இணைப்பு வைப்பதற்கும் சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெறுவது என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தவே.
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை என பல்வேறு வழக்குகள் நீதிமன்றம் வந்துள்ளன.
காவல்துறையினர் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை என்பதை இது காட்டுகிறது.
திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் நடத்த முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்.பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கே காவல்துறையினர் உள்ளனர் என்றார்.
இறுதியாக விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும், ஆபாச நடனங்களோ, வார்த்தைகளோ இடம் பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பையடுத்து தென் மாவட்டங்களில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இதற்கு ஒரு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திடுவாங்க போல.