இந்தியாவில் நுழைய முயலும் வங்கதேச போலிசார் மற்றும் சிறைக்கைதிகள்!

இந்தியாவில் நுழைய முயலும் வங்கதேச போலிசார் மற்றும் சிறைக்கைதிகள்!

ம.பா.கெஜராஜ்,

 வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதைப் போலவே  அவர் கட்சியைச் சேர்ந்தவர்களும், போலிசார் மற்றூம் சிறைக்கைதிகளும் தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயல்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 இந்தியாவின் அண்டை நாடான 'வங்கதேசத்தில் மாணவர் புரட்சி ஏற்பட்டதால், அந்நாட்டு அதிபர் ஷேக்ஹசீனா நாட்டைவிட்டு தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

 இந்நிலையில் அந்நாட்டு  சிறைகளில் இருந்து தப்பிய 1,200 கைதிகள் இந்தியாவில் நுழைய வாய்ப்புள்ளது'' என கருதி  எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் முன்னெச்சரிகை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

  வங்கதேசத்தில் வன்முறையின்போது, அங்குள்ள 5 சிறைகளில் இருந்த கைதிகளை போராட்டக்காரர்கள் வெளியேற்றினர்.

  நர்சிங்கி சிறையில் இருந்து தப்பியவர்களில் 400 கைதிகள் மட்டும் சரணடைந்துள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி, ஹெபாசத்-இ-இஸ்லாம் அமைப்புகளைச் சேர்ந்ததீவிரவாதிகள் சரணைடையவில்லை. இவர்களில் பலர் தாங்கள் பதுக்கிவைத்துள்ள ஆயுதங்களை விற்க இந்தியாவுக்குள் நுழையலாம் என எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 அது மட்டுமின்றி வங்கதேசத்தில் போராட்டத்தின் போது போலீஸார் பலரும் பணிக்கு திரும்பவில்லை. அவர்கள் வழக்குகளுக்கு பயந்து இந்தியாவுக்குள் நுழையலாம் என கூறப்படுகிறது.

   ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை சோதனை சாவடியில் வங்கதேச எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைது செய்தனர்.

 அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக வங்கதேச மக்கள் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 4 சம்பவங்கள் நடைபெற்றன.

 மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே அங்கு எல்லைப் பாதுகாப்பு பணியில் பின் தங்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

 அந்த வகையில், 4096 கி.மீ நீள இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வீரர்கள் போதிய அளவில் இல்லை. எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட முள்வேலிகளில் பல இடங்கள் ஓட்டையாகவும், சில பகுதிகளில் நீர்நிலைகள்இருப்பதாலும், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 ஏற்கனவே இது போன்ற வழிகளில்  தங்கம், போதைப் பொருட்கள், மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தல் நடைபெறுகின்றன.

 இந்நிலையில் இருநாட்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் கூட்டாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.