கெத்து காட்டும் பாமக! கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அதிமுக - பாஜக போட்டா போட்டி!

ம.பா.கெஜராஜ்,
வட மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் போட்டா போட்டி நடத்தி வருகின்றன. அதற்கேற்றவாறு, அதிமுகவுடனும், பாஜக வுடன் பாமக பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வடதமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக, 2019 மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. இருப்பினும் பேசியபடி அன்புமணி மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
அதன் பின்னர், இதே கூட்டணியில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க, தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், மயிலம், சேலம் மேற்கு ஆகிய 5 இடங்களில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பா.ம.க, 2022 செப்டம்பரில் நடந்த 9 மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது.
அதன்பிறகு நடந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்ததுடன், 'யாருக்கும் ஆதரவு இல்லை. அதிமுக கூட்டணியிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பாமக இல்லை" என்று வெளிப்படையாக அறிவித்தது கெத்து காட்டியது.
அப்படியிருக்க நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்' என்று அறிவித்த பாமக, இது தொடர்பாக அதிமுக மற்றும் பாஜகவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, பாமக, தேமுதிகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கடந்த 5-ம் தேதி டெல்லியில் பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசினார். பாஜக முக்கிய தலைவர்களும் டெல்லியில் அன்புமணியிடம் பேசி வருகின்றனர்.
அதில் பாமக தரப்பில் பாஜகவிடம் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் 12 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அமைச்சரவையில் இடம் கேட்பதாக கூறப்படுகிறது. அதற்கு பாஜக ஒப்புதல் தெரிவிக்காததால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
மேலும் பாஜக மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி தைலாபுரம் சென்று பா.ம.க. வுடன் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக கசிந்த தகவலை முன்கூட்டியே அறிந்த அதிமுக, பாமகவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கடந்த 5-ம் தேதி சந்தித்து பேசியிருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது, இருவரும் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது. அப்போது பாமக தரப்பில், 10 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கேட்டதாக தெரிகிறது. அதிகப்படியாக வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தர்மபுரி, சிதம்பரம், அரக்கோணம், ஆரணி, சேலம் உள்ளிட்ட தொகுதிகளை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் சுட்டிகாட்டினாராம்.
ஆனால் அதிமுகவோ கடந்த முறை போன்று 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டு ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் 10 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி வேண்டும் என்று ராமதாஸ் கூறியதால், இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதாக சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
மறு பக்கம் பா.ம.க., பாஜவுடன் கூட்டணி பற்றி பேசி வரும் சூழலில், அதிமுக சற்று கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.