வேலூர் திருப்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா! பிரியாணி வழங்கியதால் மக்கள் குஷி!

ஜி.கே.சேகரன்,
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுகவினர் ஊர்வலமாக சென்று கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருப்பத்தூர்மாவட்டம், திருப்பத்தூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஊர்வலமாக சென்று கலைஞர் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர கழகச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட கழக செயலாளர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். உடன் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகரமன்ற துணை தலைவர் சபியுல்லா என திரளானோர் கலந்துக்கொண்டனர்.
அதே போல் வேலூரில் திமுகவினர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கினர்
மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் தலைமையில் கலைஞர் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா,உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள், பின்னர் பொதுமக்களுக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.
இதே போன்று வேலூர் மாநகர அலுவலகத்திலும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் திரு உருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.