மோடி சோனியா ராகுல் காந்தி பரூக் அப்துல்லா ஆகியோர் கலைஞர் பிறந்த தினத்தில் அஞ்சலி!

ம.பா.கெஜராஜ்,
டெல்லியில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது. அதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெல்லியில் நடந்த கலைஞரின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவில் சோனியா காந்தி மேடம், என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா, மதிப்பிற்குரிய தோழர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
ஒரு மாநிலத் தலைவராக மட்டுமல்ல, தேசிய அரசியல்வாதியாகவும் கலைஞரின் பாரம்பரியத்தை நாங்கள் நினைவுகூர்கிறோம். கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்திற்காக தலைவர் கலைஞரின் உறுதியான குரல் தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்தது. கொந்தளிப்பான காலங்களில், அரசாங்கம் நிலையானதாக இருப்பதை உறுதி செய்தார்.
இந்தியாவின் பல பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் அவரது முக்கிய பங்கு நாட்டின் அரசியல் நிலப் பரப்பை கணிசமாக வடிவமைத்தது. இந்த வீரியத்துடன், ஜூன் 4ஆம் தேதி எங்கள் கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்திய மக்களின் வெற்றியாக அது இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கலைஞரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பொது வாழ்வில் நீண்ட காலம் இருந்த அவர், தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர். அறிவுக்கூர்மை காரணமாக பெரிதும் மதிக்கப்படுபவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களாக இருந்த தருணங்கள் உள்பட பல முறை நான் அவருடன் உரையாடி இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, "தன் எண்ணங்களாலும் செயல்களாலும் தேசத்திற்கு சேவை செய்த இந்தியாவின் மகத்தான புதல்வர் கருணாநிதி. தன் வாழ்நாள் முழுவதும் தேசத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். தமிழகம் மட்டுமல்லாது தேசத்தைப் பற்றி சிந்தித்தவர். அவருடன் ஒரு சிறந்த உறவு எனக்கு இருந்தது.
அந்த பெரியவரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என கூறினார்.
கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, "தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர் அவர். சமூக நீதியை மேம்படுத்துதல், பொருளாதார சமத்துவத்தை முன்னேற்றுதல் மற்றும் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக பாடுபட்டவர். நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்கள் மீது அவரது வாழ்க்கை நீடித்த முத்திரையை பதித்துள்ளது" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
கலைஞரின் 101 வது பிறந்த தின வாழ்த்து செய்தியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் கீழ் கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில், தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்! தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்! வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்! முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!
இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி - தமிழினத்தின் எழுச்சி - தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்! கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்! என குறிப்பிட்டுளார்.
பின்னர் கலைஞர் சமாதிக்கு மலர் அஞ்சலி வைத்து முதல்வர் அஞ்சலி செலுத்தினார். உடன் அமைச்சர்கள் இருந்தனர்.