ரூ.கோடிகணக்கான நிலத்துக்கு போலி பதிவு செய்து கொடுத்த ஆம்பூர் பதிவாளர்!

ரூ.கோடிகணக்கான நிலத்துக்கு போலி பதிவு செய்து கொடுத்த ஆம்பூர் பதிவாளர்!

 கு.அசோக்,

1.87 செண்ட் விவசாய நிலத்தை போலிப் பத்திரம் மூலம் பத்திரபதிவு செய்துள்ளதாக கூறி 7 குடும்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சார்பதிவாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் அப்பாய் ரெட்டி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், அவரது பெயரில் உள்ள 1.87 செண்ட் விவசாய நிலத்தை ஆம்பூர் பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவருக்கு கடந்த 1951 ல் அடமானம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

  மீண்டும் அந்த நிலத்தை 1956 ல் அப்பாய் ரெட்டி மீட்டதாகவும், அப்பாய் ரெட்டி பெயரில் உள்ள நிலத்தினை அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவர் சென்னாய்ரெட்டி பெயரில்  போலி பத்திரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

  இதை சுட்டிக்காட்டி, அப்பாய்ரெட்டி குடும்பத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் பொறுப்பு சார்பதிவாளர் பிரபாகரனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

   மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரத்தை ரத்து செய்து தரும் வரை செல்லமாட்டோம் எனக் கூறி தரையில் படுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் என்பவர் போலீசார் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பதிவாளர் ஆகியோரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்து அதன் பேரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  இதனால் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. 

   இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி அளித்த பேட்டியில், தங்களுடைய தாத்தா அப்பாய் ரெட்டி பெயரில் உள்ள 1.87 ஏக்கர் விவசாய நிலத்தில் மூன்று தலைமுறையாக ஏழு குடும்பத்தினர் கூட்டுக் குடும்பமாக தொடர்ந்து  செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருவதாகவும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் வேலு என்பவர் சென்னாய்ரெட்டி பெயரில் போலி பத்திரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் இதற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் முழு காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனவும் சொன்னார்.