எங்களை வெளியேற்றிவிட்டு கள்ளக்குறிச்சி குறித்து 15 நிமிடம் விவரிக்கிறார் முதல்வர்! ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா?எடப்பாடி பழனிசாமி கேள்வி!

எங்களை வெளியேற்றிவிட்டு    கள்ளக்குறிச்சி குறித்து 15 நிமிடம் விவரிக்கிறார்  முதல்வர்! ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா?எடப்பாடி பழனிசாமி கேள்வி!

 ம.பா.கெஜராஜ்,

அவையில் எங்களை பேச அனுமதித்துவிட்டு, அதன்பிறகு முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? எங்களை வெளியேற்றிவிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி குறித்து 15 நிமிடம் விவரிக்கிறார். ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா?  என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தமிழக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்காமல் விட்டனர் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து அதிமுக இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இதில் தேமுதிகசார்பில் பிரேமலதாவும்,  புரட்சி பாரதம் சார்பில் கேவிகுப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியும் பங்கேற்றனர்.

 கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்திய 63 பேர் உயிரிழந்தனர். தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என அதிமுகவினர் ஒவ்வொரு நாளும் அமளியில் ஈடுபட்டு பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இத்தொடர் முழுவதும் பேரவையில் பங்கேற்காத வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 அப்படியிருக்க, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று காலை முதல் மாலைவரை வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மைக் மற்றும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் தனியாகவும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தனியாகவும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிர போராட்டத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சிபிஐ விசாரணை நடத்தினால் திமுகவின் முகத்திரை கிழியும் என்பதால் அதற்கு மறுக்கின்றனர்.

  எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்க நினைத்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். 2026-ல் நிச்சயம் ஆட்சி மாறும். அதிமுக-தேமுதிக கூட்டணியில் நல்லாட்சி மலரும்" என்றார்

  புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் நேரில் சந்தித்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரும் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன்  டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ எஸ் பி வேலுமணி, பி.தங்கமணி, சி.பொன்னையன், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார்,மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெறுவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது குறிப்பிடுகையில்,  இந்தியாவே தமிழகத்தை நோக்கிப் பார்க்கிற வகையில், கள்ளக்குறிச்சியில் நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. விலை மதிக்க முடியாத பல உயிர்களை இழந்து இருக்கிறோம். இந்தச் சம்பவம் எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? இதுதான் மக்களுடைய கேள்வி.

  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவலங்களால், கள்ளக்குறிச்சி இன்று கண்ணீரில் மிதந்துக் கொண்டிருக்கிறது.

 கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. அதோடு மாதவச்சேரி, கேசவசமுத்திரம், கருணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த 63 பேர் கள்ளச் சாராயம் அருந்தி இன்று வரை பலியாகி உள்ளனர்.

இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

 அதில் பலர் அபாயக் கட்டத்தில் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. பலருக்கு கண் பார்வை பறிபோய்விட்டது. இன்னும் பலருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

எனவே, இதை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும். பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், அதிமுக சார்பில், கள்ளக்குறிச்சிக்கு சென்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, இறந்தவர்களின் உடல்களுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினேன்.

 இதை எல்லாம் அரசின் கவனத்துக்கு சட்டமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில்தான், பிரதான கட்சியான அதிமுக சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டோம்.

ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் எங்களை அனுமதிக்கவில்லை. 21, 22, 24 மற்றும் 25ம் தேதிகளில், பேரவைத் தலைவருக்கு விதிப்படி மனு அளித்து, எங்களுக்கு பேசுவதற்கு அனுமதி கேட்டோம். சட்டமன்றத்தில் தான் மக்களுடைய பிரச்சினைகளை பேச முடியும். மக்கள் பாதிக்கப்படும்போது, பிரதான எதிர்க்கட்சியின் கடமை, அந்த பாதிப்புகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.

 அந்த அடிப்படையில்தான் நாங்கள் அந்த பிரச்சினையை எழுப்பினோம். ஆனால், ஒவ்வொரு நாளும் நாங்கள் கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரும்போது, எங்களை வேண்டுமென்றே வெளியேற்றிவிட்டு, அதன்பிறகு முதல்வர் பதில் அளிக்கிறார்.

எங்களை பேச அனுமதித்துவிட்டு, அதன்பிறகு முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? எங்களை வெளியேற்றிவிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி குறித்து 15 நிமிடம் விவரிக்கிறார். ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா?

 எதிர்க்கட்சிகளைப் பேசவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கு பதில் அளிப்பதே ஒரு நல்ல அரசாங்கத்துக்கு அடையாளம். ஆனால், திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில், சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதியே கிடையாது. மானியக் கோரிக்கையின் போது, பத்து நிமிடங்கள் மட்டும எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்கப்படும். அந்த பத்து நிமிடத்தில் என்ன பேச முடியும்? என அவர் கேள்வி எழுப்பி பேசினார்.