அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைகிறதா?

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைகிறதா?

 ஜான் மரிய ஜோசப்,

 திக்கு தெரியாத காட்டில் வழி தேடிக் கொண்டிருக்கும் கட்சியாகவே அமமுக பார்க்கப்படுகிறது. அடுத்து என்ன செய்யலாம் என்று கூட முடிவெடுக்க இயலாமல் கட்சி தலைமை திகைக்க, கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தொண்டர்களோ ஏதோ ஒரு நப்பாசையில் அ.தி.மு.க.வுடன் கட்சியை சேர்த்துடுவாங்கப்பா என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

  அந்த நப்பாசையில் கூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் மண்ணை அள்ளி போட்டிருக்கிறார்.

  அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

   கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.

   குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார்.

சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார். அவற்றை மறந்து விட்டார்.

   முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாவற்றையும் மூடுவிழா செய்து விட்டனர்.

   தி.மு.க. ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சத்துக்காக மு.க.ஸ்டாலின் செய்கிறார்.

  காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதால் அத்துமீறி செயல்படுவது மக்கள் மத்தியில் அவப்பெயரை தான் ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இணைய வாய்ப்பில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும்.

   சசிகலா பா.ஜ.க.வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறி வருகிறார். அதுகுறித்து சசிகலா தான் கூற வேண்டும் என்று சொன்னார்.