ஏழை முதியவருக்கு பணியாற்றாத அரசு அதிகாரிகளுக்கு பத்து லட்சம் சம்பளம்! சூப்பர் லே!

ஏழை முதியவருக்கு பணியாற்றாத அரசு அதிகாரிகளுக்கு பத்து லட்சம் சம்பளம்! சூப்பர் லே!

க.பாலகுரு,

"சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்க வேண்டியதாக உள்ளது.." ரேஷன் அரிசி கொடுக்கவில்லை என  முதியவர் வேதனை.

 திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே எட்டியலூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் 80 வயதுடைய ஜெகநாதன். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், ஜெகநாதனின் மனைவி இறந்துவிட்டார். தற்போது ஜெகநாதன் வீட்டில் அவரது மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.

  ஜெகநாதன் நீண்ட நாட்களாக தன்னுடைய ரேஷன் கார்டு மூலமாக எட்டியலூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில்  பொருட்கள் வாங்கி வந்துள்ளார்.

  இந்த நிலையில் ஜெகநாதனின் கைரேகை பதிவதில்லை என கடந்த நான்கு ஐந்து மாதமாக இவரது ரேஷன் அட்டைக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

  இதுகுறித்து திருவாரூர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கடந்த 27.08.2024 அன்று தனக்கு ரேஷன் பொருட்கள் வழங்க அனுமதி வழங்க வேண்டும் என ஜெகநாதன் கோரிக்கையை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை அவரது மனு மீது எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என ஜெகநாதன் குற்றம் சுமத்துகிறார்.

 மேலும் ஜெகநாதன் சொல்லும் போது "ரேஷன் கடையில் வழங்கும் அரிசியை வைத்துதான்  சாப்பிட்டு வருவதாகவும், தற்போது அரிசி கொடுக்காத காரணத்தினால் சோத்துக்கே 'சிங்கி' அடிக்க வேண்டியதாக உள்ளது என்றும், தனக்கு ரேஷன் பொருள்கள் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தார்.

 வயதானவர்களின் கைரேகை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

  முதியவர் ஜெகநாதனின் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரிவில் பணியாற்றுபவர்கள் கடந்த ஐந்து மாதங்களில் பத்து லட்சம் ரூபாய் வரை அரசு சம்பளம் பெற்றுள்ளனர்.

சூப்பர் லே!