"நடு குளத்துக்குள்ளே நடவு வயல்"! வி.ஏ.ஓ. முதல் ஆட்சியர் வரை கலாய்த்து போஸ்ட்டர்!

ரா.பாலஜோதி.
கழக உடன் பிறப்பு பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "நடுகுளத்தில் ஒரு நடவு வயல்" என்கிற வாசகங்கள் அடங்கிய திடீர் போஸ்டரால் புக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகுணா. எழுத்தாளரான இவர் அவ்வப்பொழுது வித்தியாசமான வகையில் போராட்ட அறிவிப்பை வெளியிடுவார்.
இந்நிலையில் துவார் என்கிற கிராமத்தில் உள்ள குளங்களை சிலர் ஆக்கிரமித்து, அவற்றை விளை நிலங்களாக மாற்றி அனுபவித்து வருகிறார்கள். ஆகவே அந்த குளங்களை மீட்க வேண்டும் என்று கோரி, மாவட்ட நிர்வாகத்துக்கு ஏற்கனவே பல புகார் மனுக்களை அவர் அளித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே தற்போது மேலும் ஒரு புகார் மனுவை அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தற்போது எழுதியிருக்கும் புகாரில், நான் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஆவேன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா துவார் கிராம புல எண்கள் 272/1 மற்றும் 257/2 மேற்கண்ட புல எண்கள் நீர்நிலைகள் நிறைந்த குளங்களாகும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் இந்த பகுதி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நீராதாரமாக விளங்கியது.
மேற்கண்ட நீர் ஆதாரங்களை பராமரிக்க தவறிய காரணத்தினால் தனிநபர்கள் நீராதாரங்களில் தடயங்களை அழித்து ஆக்கிரமிப்பு செய்து நெல் மற்றும் தைல மரங்கள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வுகளை அரசு அவ்வப்போது செய்து வருகிறது. நீர் நிலைகள் புணரமைத்து பாதுகாக்க வேண்டி வருடம் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை அரசு செலவிட்டு வருகிறது.
இந்த நிலையில் நீர்நிலைகளை நம்பியுள்ள விளைநிலங்களும் நீரின்றி பழுதாகி கால்நடைகளும் பொய்த்துப் போனது.
இது குறித்த புகாரை 17-02-2020 தேதியிலும் 19-08-2021 தேதியிலும் தாங்கள் நிர்வாகத்திற்கு இதை புகார் மனுவாக அனுப்பி உள்ளேன்.
ஆனால் இந்த மனு மீது இதனால் வரையிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மீண்டும் இதை மேல் முறையிட்டு புகார் மனுவாக தாங்கள் ஏற்றுக்கொண்டு நன்கு பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த புகாரை கடந்த 5 ஆம் மாதம் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் அளித்துள்ளார்.
இருப்பினும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வித்தியாசமான ஒன்றை ஆங்காங்கே ஒட்டியிருக்கிறார்.
அதில் கழக உடன் பிரப்பு பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "நடுகுளத்தில் ஒரு நடவு வயல்" கதை திரைக்கதை வட்டார வளர்ச்சி அலுவர், பிண்ணனி இசை வருவாய் கோட்டாட்சியர், சண்டை பயிற்சி துரை குணா.
வசனம் இயக்கம் வட்டாட்சியர். பாடல்கள் கிராம நிர்வாக அலுவலர், படத்தொகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர், ஒளிப்பதிவு வருவாய் ஆய்வாளர், நடனம் தலையாரி, தயாரிப்பு மேற்பார்வை மாவட்ட ஆட்சியர்.
இன்று முதல் ரிசர்வேஷன் ஆரம்பம். என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.ஸ்