கிரிக்கெட் விளையாடுவதற்கான மைதானம் ஏற்படுத்தி தரவேண்டும்!மாநில சங்க தலைவர் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
கிரிக்கெட் அணிகள் விளையாடுவதற்கான மைதானம் உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று, கிரிக்கெட் சங்க ஆண்டு விழாவில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி பேசினார்.மேலும் சிறந்த அணிகளுக்கு சுழற்கோப்பை வழங்கினார்.
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் நறுவீ சம்பத் தலைமையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டாக்டர் பி. அசோக் சிகாமணி சுழற்கோப்பைகள் வழங்கினார்.
வேலூர் மவாட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழா மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா வேலூரில் உள்ள ஜே.பி.எம். மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் சங்கத்தின் ஆண்டு விழா அறிக்கையை சங்க மாவட்ட செயலாளர் எஸ். ஸ்ரீதரன் வாசித்தார்.
விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டாக்டர் பி.அசோக் சிகாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நல்ல முறையில் இயங்கி வருவதை காண முடிகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அவசியம். சென்னையில் உள்ள கிரிக்கெட் அணிகள் உரிய அடிப்படை வசதிகளுடன் இயங்கி வருகின்றன.
இதே போன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள கிரிக்கெட் அணிகள் விளையாடுவதற்கான மைதானம் உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவேண்டும்.
இதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து வகையில் உதவிசெய்ய தயராக உள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி சிறந்த கிரிக்கெட் வீரர்களாக உருவாக வேண்டும். கிரிக்கெட் வீரர்களின் தரத்தினை உயர்த்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேட்ஸ்மேன் மற்றும் வேக பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு நல்ல பயிற்சி வழங்க வேண்டும்.
இளைஞர்கள் கிரிக்கெட் மட்டுமின்றி ஏதாவது ஒரு விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் கே.எஸ்.விஸ்வநாதன் கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசுகையில் கடந்த பத்து ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். ஒவ்வொரு மாநில கிரிக்கெட் அணியில் குறைந்தது ஏழு வீரர்களாவது மாவட்ட அளவிலான கிரிக்கெட் சங்கத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களாக இருந்துள்ளனர். தற்போது மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளதால் மேலும் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
நம் நாட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுக்கும் முறை தமிழ்நாட்டில் தான் முதலிலிருந்தே உரிய முறையில் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பொறுப்பேற்றுள்ளார். இனிமேல் வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் டாக்டர் ஆர்.என். பாபா, வேலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார், தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் சங்க இணை செயலாளர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார்.