வணிக வளாகங்களை குடியிருப்பாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு! ஆண்டுக்கு 10 கோடி நஷ்ட்டம்!!

காஞ்சி.கோட்டி.
காஞ்சிபுரம் பெரு நகராட்சி, கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் வணிக நிறுவனங்கள் பல, தில்லுமுல்லு வேலை செய்து, சொத்து மதிப்பை குறைத்து காட்டி பயனடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் நகரில் 700 தெருக்களில் 2.76 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் 50 ஆயிரத்து 680 வீடுகளுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது.
இது தவிர, சொத்து, குடிநீர், தொழில், பாதாள சாக்கடை இணைப்பு என, பல ரக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. நகரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. ஆனால், மாநகராட்சி கணக்கில் 2,408 மட்டுமே உள்ளது.
அதிலும் 100- க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், குடியிருப்பு பிரிவு என பதியப்பட்டு, அதற்கான வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இதனால் மாநகராட்சிக்கு ரூ.பத்து கோடிவரை வருமான இழப்பு ஏற்படுகிறது.
ஆகவே இந்த வரி குளறுபடிகளை திருத்தி, வணிக நிறுவனங்களுக்கு உரிய வரி செலுத்தும்படி மாற்றினால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அது மாநகராட்சிக்குட்பட்ட வளர்ச்சிப்பணிகளுக்கு பேருதவியாக இருக்கும்.
ஆனால் இதற்கெல்லாம் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக்கூடாதே?