அ.தி.மு.க. கலாட்டா எதிரொலி? ஓடி... ஓடி சோதனை செய்யும் அலுவலர்கள்!

அ.தி.மு.க. கலாட்டா எதிரொலி? ஓடி... ஓடி சோதனை செய்யும் அலுவலர்கள்!

  ஆர்.ரமேஷ்,

 வாக்கு எண்ணிக்கை மையத்தை மையப்படுத்தி அ.தி.மு.க. மேற்கொண்ட கலாட்டாவுக்கு பின்னர் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஓடி... ஓடி ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் பணியில் 3,438 அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பணிகளைக் கண்காணிக்க 567 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

  இந்த மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திருப்பத்தூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் குரிசிலாப்பட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கான வாக்குகள் அக்ரஹாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், நாட்றாம்பள்ளி ஒன்றியத்துக்கான வாக்குகள் நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கந்தலி ஒன்றியத்துக்கான வாக்குகள் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாதனூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் ஆம்பூர் ஆணைக்கார் ஓரியன்டல் மேல்நிலைப் பள்ளியிலும், ஆலங்காயம் ஒன்றியத்துக்கான வாக்குகள் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.

   வாக்கு எண்ணிக்கை நாளை (அக். 12) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணிக்காகத் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு 347 பேர், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு 680 பேர், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு 616 பேர், கந்திலி ஒன்றியத்துக்கு 740 பேர், மாதனூர் ஒன்றியத்துக்கு 700 பேர், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு 355 பேர் என, மொத்தம் 3,438 அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  6 வாக்கு எண்ணும் மையங்களில் 567 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

  வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு காலை 6.30 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி அங்கேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இது வழக்கமான தேர்தல் கால நடைமுறைதான் என்றாலும் கூட, கடந்த 10.10.2021 ஆம் தேதி ஆலங்காயம் மையத்தில் முறைகேடுகள் நடந்ததாக அதிமுகவினர் மேற்கொண்ட ரகளையால் ஆய்வுகளும், சோதனைகளும் அலுவலர்களால் ஓடி ஓடி செய்யப்படுகின்றன.