ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தன் மறைந்தார்! திருச்சி முகாமிலேயே சாகப்போகிறோம் என பயந்தது போலவே நடந்துவிட்டது!

ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தன் மறைந்தார்! திருச்சி முகாமிலேயே சாகப்போகிறோம் என பயந்தது போலவே நடந்துவிட்டது!

ம.பா.கெஜராஜ்,

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டதால், கடந்த ஜனவரி மாதம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

 பின்னர் அவர் இலங்கைக்கு செல்ல சில சட்ட அனுமதி தேவையிருந்ததால் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார்ராகியோர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

 இந்நிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்கலாம் என்று மத்திய அரசு, திருச்சி ஆட்சியருக்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பியது.       

 ஆனால்  சாந்தனின்¢ உடல்நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டது.  ஆகவே அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதற்குள் அவரது உயிர் பிரிந்துள்ளது.

  அதே போல் ராபர் பயாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்,  எனது உடல் நலத்தை சரி செய்ய நடை பயிற்சி செய்ய அனுமதி கேட்டும் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் எனது உடலில் பல நோய்கள் வந்துள்ளது. கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்தபோது ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி, இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

   அதனால் கடந்த 22.1.2024 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடை பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை. மேலும் இந்த முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ, எந்த மதிப்பும் இல்லை. அதனால் தான் சாந்தன் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  அதே நிலை தொடர்ந்தால் நாங்கள் இங்கேயே இறப்பது உறுதி இதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளேன்.

  ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

  சாந்தனின் தாயும், ராபர்ட் பயாசும் பயந்தபடியே இன்று சாந்தன் காலமாகிவிட்டார். கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்த சாந்தன் கடைசிவரை அவரது தாய் மண்ணை மிதிக்க முடியவில்லை.

  சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் தெரிவிக்கையில் "சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

 அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

 கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்" என் தெரிவித்துள்ளார்.