துரு பிடித்த பள்ளி பேருந்து கதவு! தகுதி நீக்கம் செய்த வட்டார போக்குவரத்து அலுவலர்

க.பாலகுரு,
தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக உபயோகப்படும் பேருந்துகளை சோதனை செய்யும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த சோதனையானது பெயரளவுக்கு நடத்தப்படுகிறது என்பது பலரும் அறிந்ததே.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒன்பது பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தகுதி நீக்கம் செய்திருக்கிறார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் ஆய்வில், கண்காணிப்பு கேமரா மற்றும் அவசரக்கால கதவு இயங்காத 9,வாகனங்கள் தகுதி நீக்கம்; பள்ளி செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதால் நடவடிக்கை.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதத்தில் திறக்கப்பட உள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்ட ஆய்வில் வட்டார போக்குவரத்து துறை, கல்வித்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 34 பள்ளிகளை சேர்ந்த 146 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஎஸ் கருவிகள், தீயணைப்பு கருவிகள், அவசர கால வழி கதவுகள், படிக்கட்டுகள், முதலுதவி பெட்டி போன்ற அம்சங்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா என வருவாய் அலுவலர் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 34 பள்ளிகளை சேர்ந்த 146 வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 9 வாகனங்களில் முறையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் இருந்ததும் மேலும் அவசரகால கதவு இயங்காமல் துருப்பிடித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளி செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத 9, வாகனங்களை தகுதி நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பேபி திருப்பி அனுப்பினார்.
மேலும் குழந்தைகளை பள்ளிக்கு சந்தோசமாக அனுப்புவதை போல் அவர்கள் பாதுகாப்பாக சென்று வருவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.