நிலா... நிலா... ஓடிவா ... பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகள் மெய்பித்துள்ளனர்! வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்! பிரதமர் பாராட்டு!

ம.பா.கெஜராஜ்,
நிலா... நிலா... ஓடிவா ... பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகள் மெய்பித்துள்ளனர் அடுத்ததாக இந்தியா மனிதனை நிலாவுக்கு அனுப்பும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்தியாவின் இஸ்ரோவைப் பொறுத்தவரை சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் உள்ளது என ஏற்கனவே உறுதி செய்துள்ளது.
அப்படியிருக்க, நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.
நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி சென்றது. நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வந்தது.
இந்நிலையில் மிகச்சரியாக, இன்று மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு நிலவில் தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் முன்பே தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி மாலை 5.22 மணியில் இருந்து தொடங்கியது.
விண்வெளியில் சாதனை படைக்கும் இந்தியாவின் முயற்சியின் முக்கிய பகுதியாக, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு அமைந்துள்ளது. இதன்பின்னர், மாலை 5.46 மணியளவில் விக்ரம் லேண்டரை நிலவின் தரை பகுதியில் இறக்கும் கட்டம் தொடங்கியது என இஸ்ரோ அறிவித்தது.
விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. தானாக தரையிறங்கும் திட்ட நிகழ்வு (ஏ.எல்.எஸ்) தொடங்கப்பட்டது. இதனால், லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நடந்தது. இதன்பின்னர், நிலவில் எந்த பகுதியில் தரையிறங்குவது என்ற பகுதியை லேண்டர் தேர்வு செய்தது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்கியது.
இந்நிலையில் சந்திராயன் 3 லேண்டர் தரையிறங்கியதை தென் ஆப்பிரிக்காவில் இருந்தபடியே பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் இருந்து காணொலி வழியே பிரதமர் மோடி கண்டு ரசித்தார். அப்போது தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த வெற்றி என்றார்.
பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நிலவின் தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத சாதனையை இந்தியா அடைந்திருக்கிறது. வெற்றிக்கு உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கோடானுகோடி நன்றி.
இந்தியா தற்போது நிலவில் உள்ளது; சந்திரயான் 3 வெற்றிக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். நிலா... நிலா... ஓடிவா ... பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகள் மெய்பித்துள்ளனர். மாபெரும் சாதனை படைத்திருக்கிறது இஸ்ரோ. நிலவுக்கு மனிதனை அனுப்புவது தான் அடுத்தக் கட்ட திட்டம்." என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார்.
இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.