தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் :- ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம்! மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்ற கூட்டதொடர் துவங்கியிருக்கும் நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் இந்திய ஜனாதிபதி திரொபதி முர்முவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது ஜனாதிபதி, அமைச்சருக்கு இனிப்பு கொடுத்து வழியனுப்பி வைத்தார். அதன் பி ன்னர் தொடர்ச்சியாக 6-வது பட்ஜெடை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இது இடைகால பட்ஜெட் ஆகும். தற்போது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வரவிருப்பதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும்.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் விவசாயிகளுக்கான உதவித் தொகை உயர்வு உள்ளிட்டவை இடம் பெறும் என்று பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், சுமார் 57 நிமிடங்கள் அவையில் பேசினார்.
அதில் பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. வளர்ச்சியின் பயன்கள் ஏழை, எளிய மக்களை அடையத் தொடங்கியுள்ளன. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மீண்டும் வலுவான பெரும்பான்மையுடன் எங்களை ஆட்சியில் அமர்த்துவர்.
சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுகிறோம். சமூக நீதி என்பது அரசின் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்தி வருகிறோம். நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு, அனைவரும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம்.
2047ல் புதிய இந்தியாவை படைப்போம். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது.
ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் 2014-க்கு முந்தைய காலகட்டத்தின் ஒவ்வொரு சவாலும் முறியடிக்கப்பட்டது.80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் உணவு பொருட்கள் சென்றடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மேல் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28% உயர்ந்துள்ளன.
10 ஆண்டுகளில் 7 ஐ.ஐ.டி.க்கள், 3,000 புதிய ஐ.டி.ஐ., 319 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். பிரதான் மந்திரி வீடு காட்டும் திட்டம் மூலம் 70% பெண்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்கள் தொடங்க பெண்களுக்கு முத்ரா திட்டத்தில் ரூ.30 கோடி அளவில் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறையின் 55 லட்சம் வேலைவாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளன." என்று பட்ஜெட் உரையில் விரிவாக பேசினார் நிதியமைச்சர்.
கீழ்கண்டவை தான் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
*தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
*ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
*வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
*ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
*நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.
*கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
*நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
*அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.
* நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தும்.
* சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் 3 விரைவில் அமைக்கப்படும்.
* லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2023-24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடி. திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. *27.56 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை - 5.8%.
* 2024-25 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 5.1% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் *ஆண்டிற்குள் பற்றாக்குறையை ஜிடிபி-யில் 4.5% ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
* வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றம் இல்லை.
* நேரடி மற்றும் மறைமுக வரி, இறக்குமதி வரி விதிப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லை.
* வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்
* கூடுதலாக செலுத்திய வருமான வரி 10 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.
* நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்.
* ரூ.25,000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 1 கோடி பேர் பயனடைவர்.
*உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.
* ரூ11.75 லட்ச கோடி கடன் வாங்குவதற்கு திட்டம்.
* இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரிப்பு.
* 10 வருடங்களில் 500 பில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளது.
* உள்கட்டமைப்புக்கான செலவு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
* ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க திட்டம்.
பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கு முன்னுரிமை.
*3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்.
* விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
*கடல் உணவுகளின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 5 மீன்வள பூங்காக்கள் அமைக்கப்படும்.
* விவசாய துறையில் கூடுதல் முதலீடு செய்ய அரசு தயார்.
* கார்ப்பரேட் வரி 22% ஆக குறைப்பு.
இந்த பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.