கர்நாடகாவில் 18 தொகுதிகளில் கைபடரும்! தட்டித் தூக்கும் டி.கே.சிவகுமார்!

கர்நாடகாவில் 18 தொகுதிகளில் கைபடரும்! தட்டித் தூக்கும் டி.கே.சிவகுமார்!

ம.பா.கெஜராஜ்

  கர்நாடகாவில் மக்களவை தேர்தலின் வாக்குபதிவு  ஏப்ரல் 26 ஆம் தேதி மே-7 ஆம் தேதி என இரண்டு பிரிவுகளாக நடைபெறவிருக்கிறது. தென்னிந்தியாவில் தேசிய கட்சிகளின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் மாநிலம் கர்நாடகா. பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமரும் மாநிலம். மத்தியில் ஆட்சி அமைப்பதில் இம்மாநிலத்தின் 28 மக்களவைத் தொகுதிகள் முக்கியமானது.

 கடந்த 2019 தேர்தலில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. இதுதான் அக்கட்சி பெற்ற அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தால் 2009 - 41.63 சதவீதம், 2014 - 43.37 சதவீதம், 2019 - 51.74 சதவீதம் எனப் பெற்றிருந்தனர்.

  ஆனால் இம்முறை பாஜக 25 இடங்களை நெருங்குவது கஷ்டம் என்கின்றனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளே அத்தற்கு காரணம். அந்த தேர்தலில் 135 தொகுதிகள், 42.88 சதவீத வாக்குகள் உடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.

 காங்கிரஸ் ஆட்சீயில் "5 கேரண்டிகள்" என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை ஆகியவை பெண்கள், இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றன. இந்த விஷயங்கள் காங்கிரஸிற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

அதேபோல் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் பெங்களூரில் ஏற்பட்டதை காங்கிரஸ் அரசு சரியாக கையாளவில்லை என்கின்ற குற்றச்சாட்டும், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மேகதாது திட்டம் குறித்த அதிர்ச்சியும் காங்கிரசுக்கு சற்று மைனஸ் பாயிண்ட்..

மேலும் 28 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் ஆறு தொகுதியில் வாரிசுகளுக்கு சீட்டு கொடுத்திருப்பதை குடும்ப அரசியல் என்று பாஜக விமர்சித்து வருகிறது.

   பாஜகவை பொறுத்தவரை தலைமைக்கான மோதல் என்பது பெரிய மைனட் பாயிண்ட். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா தான், கர்நாடகா மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். இதற்கு ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் உடபடவில்லை. பொதுவாக சீனியர்கள் பலருக்கு பிடிக்கவில்லை.

 அதற்கு பி.ஒய். விஜயேந்திரர் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் தான் காரணம் என்கின்றனர்.

  மேலும் மக்களவைத் தேர்தலை ஒட்டி மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியை உள்ளே கொண்டு வந்தது, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவற்றிலும் தம் இஷ்டம் போல் செயல்பட்டிருக்கிறார்.

 ஆகவே சீனியர்களுக்கு அதிருப்திகள் உள்ளன. எனவே விஜயேந்திராவின் தலைமையை அக்கட்சியினர் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இது தேர்தல் களப் பணியில் பல் இளிக்கும்.

அதேபோல் தண்ணீர் பஞ்சம், வறட்சி நிதியாக மத்திய அரசு சிறிய அளவில் கூட அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பாஜக மத்திய அரசின் மீது உள்ளது. இது எம்பி தேர்தல் என்பதால் இவை பாஜகவுக்கு எதிராக பெரிய அளவில் எதிரொலிக்கும்

  மேலும் பிரதமர் மோடி செய்யும் பரப்புரையில் இஸ்லாமியர்களை குறிவைத்து பேசுவதை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து விமர்சனம் செய்து வருகின்றன. குறிப்பாக மைனாரிட்டி வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் பக்கம் கூட சென்று விடாமல், அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு விழுவதற்கான சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறது.

  இருந்த போதும் பாஜக தங்களது வாக்கு வங்கியை தொடர்ச்சியாக தக்க வைத்து வருவதை மறுக்க முடியாது.

பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஹாசன், மாண்டியா, கோலார் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  மதச்சார்பற்ற ஜனதா தளத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் வாழ்வா? சாவா? தேர்தல் தான். இவர்களின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் சரிந்து கொண்டே வந்துள்ளது. இக்கட்சியின் பலம் என்பது ஒக்கலிகா சமூக வாக்குகள் தான். ஆனால் வாரிசு அரசியலை அடுத்தடுத்து கையிலெடுப்பது அந்த சமூகத்தினரிடமும், பொதுமக்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

   இம்முறை கூட ஹாசனில் தேவகவுடா பேரனும், மாண்டியாவில் குமாரசாமியும் போட்டியிடுகின்றனர். கடந்த முறை 7 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றனர். அந்த ஒரு இடமும் ஜெயிப்பது கஷ்டம்தான் என்றாலும் பாஜகவின் வாக்கு வங்கினுதவக்கூடும்.

  2023 தேர்தல் வெற்றி காங்கிரஸிற்கு எந்தளவிற்கு கைகொடுக்கும் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். ஏனெனில் அங்குள்ள சமூக ரீதியிலான வாக்குகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகங்களாக ஒக்கலிகா 10 சதவீதம், லிங்காயத்து 10 சதவீதம், குருபாக்கள் 8 சதவீதம் உள்ளனர். இதில் ஒக்கலிகா வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பிரிந்து செல்லும்.

 ஏனெனில் காங்கிரஸில் டிகே சிவக்குமார் ஒக்கலிக்கா சமூகத்தின் முக்கியமான தலைவராக பார்க்கப்படுகிறார். இம்முறை ஒக்கலிகா சமூகத்தினர் பலருக்கு வாய்ப்பளித்து டிகே சிவக்குமார் தீயாய் வேலை செய்து வருகிறார்.    இவர்களது வெற்றி உறுதியானால் முதலமைச்சர் நாற்காலிக்கு கூட காய் நகர்த்த வாய்ப்புள்ளது.

 லிங்காயத்து சமூகத்தினர் தொடர்ச்சியாக பாஜக பக்கமே இருந்து வருகின்றனர். குருபா சமூகத்தினர் சித்தராமையாவின் செல்வாக்கு காரணமாக காங்கிரஸ் பக்கம் இருக்கின்றனர். இதுதவிர எஸ்.சி சமூகத்தினரின் ஆதரவும் காங்கிரஸ் பக்கம் இருப்பதாகவே தெரிகிறது.

 மேலும் வறட்சி நிதியை மத்திய அரசு முறையாக தருவதில்லை என்று தமிழக ஸ்டைலில் சித்தராமையா செய்து வரும் பிரச்சாரமும் கவனத்தை பெற்று வருகிறது.

  கூட்டி கழித்து பார்த்தால் கர்நாடகாவில் சுமார் 18 தொகுதிகளில் கைபடரலாம் என்றே தெரிகிறது.