அரசு மருத்துவமனைகளில் இலவச எம்.ஆர்.ஐ. ஸ்கேன்! காப்பீட்டில் சேருங்க என அமைச்சர் தகவல்!

க.பாலகுரு,
தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்தார்.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.5 கோடி எம்.ஆர்.ஐ, ரூ.8.45 கோடி கேத்லேப் (ஆஞ்சியோகிராம்) சிறப்பு சிகிச்சை மற்றும் நவீன உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகிக்க, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்.பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர்; முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.,
தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று மாரடைப்பு பாதிப்புள்ளனவர்களுக்காக சிகிச்சை அளிக்கும் விதமாக, ரூ.8.45 கோடி மதிப்பீட்டில் டெல்டா மாவட்டங்களிலே முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கேத் லேப் கருவி மக்கள் பயன்பாட்டிற்காக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது. இது குறித்து இருதயத்துறை மருத்துவர்களை அதற்கான ஆராய்ச்சியினை மேற்கொள்ள கூறியுள்ளோம். பன்னாட்டு சுகாதாரத்துறை கருத்தரங்கிலும் இக்கருத்து குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதேபோன்று, ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி, மூளை, தண்டுவடம் போன்ற பல்வேறு உறுப்புகளின் நோயின் தன்மையினை காணப்பயன்படுகிறது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் தனியார் இடத்தில் எடுத்தால் விலை அதிகம். அரசு மருத்துவமனையில் எடுத்தால் விலை மிக குறைவு. ஆனால் தமிழக அரசின் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் இதனை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் தமிழக அரசின் காப்பீட்டுத்திட்டம் விண்ணப்பிக்காத 10 லட்சம் நபர்கள் விண்ணப்பித்து பயன்பெற்றுள்ளனர். காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழக அரசு பொறுப்பேற்றவுடனே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவாரூரில் மகப்பேறு மற்றும் சிசு நலனுக்கான கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.
மேலும், தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் மருத்துவக்கல்லூரியினை நான் ஆய்வு மேற்கொண்ட போது 10 ஆண்டு காலம் பராமரிக்கப்படாமல், பெருமளவில் கழிவுநீர் தேங்கிய நிலையில் இருந்ததது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமின்றி மருத்துவக்கல்லூரி தேவையான வசதிகளை கருத்தில் கொண்டு அதற்கான வசதிகளையும் உடனுக்குடன் ஏற்படுத்தி தரப்பட்டுவருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்குள்ள மருத்துவச்சேவையினை பயன்படுத்திக் கொள்ள முன்பு பயன்பெற்றுவந்து மக்களை விட தற்போது இரு மடங்காக மக்கள் பயன்பெற்றுவருகின்றனர். அதுமட்டுமின்றி, திருவாரூர் மாவட்டதில் பல்வேறு பகுதிகளில் ரூ.34 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் 47 புதிய துணை சுகாதார மருத்துவமனைகள் கட்டபட்டுவருகிறது.
திருவாரூர் மாவட்டத்தினை மருத்துவத்துறையின் சார்பில் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மிக பெரிய அளவில் முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர்.சங்கீதா, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் மரு.ஜோசப்ராஜ், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு.திலகம், திருவாரூர் நகர்மன்றத்தலைவர்
.புவனப்பிரியா செந்தில், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர்.அகிலா சந்திரசேகர், பணிநியமன குழு உறப்பினர்.பிரகாஷ், மாவட்ட சுகாதார அலுவலர்.பாலசுப்ரமணியன்,மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொ) மரு.அப்தூல் ஹமீது அன்சாரி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.மனோஜ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், வர்த்தக சங்கத்தினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.