முதல்வர் கொடுத்த காசோலையை அமைச்சரிடம் திருப்பி கொடுத்த மீனவர்! நேரடியாக கேள்வி கேட்டதால் தாக்கப்பட்டாரா?அரசு நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு!
க.பாலகுரு,
அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததை பற்றி முதல்வரிடமே கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் , அதனைத் தொடர்ந்து பல்வேறு முடிவுற்ற புதிய கட்டிடங்களை திறந்து வைத்த நிலையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :-
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்ட பணிகளை துவங்கி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் பால்பண்ணை பகுதியில் ரூபாய் 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது . கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் ஆனது நிறைவு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட தரைத்தளம் மற்றும் ஏழு மாடி கட்டிடமாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து செந்தூர் ரயிலில் சீர்காழி வந்த நிலையில் அங்கிருந்து திருவெண்காடு பகுதியில் தங்கி மயிலாடுதுறை பகுதிக்கு வருகை தந்து ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் . அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மெய்யநாதன் , ரகுபதி , கே.என். நேரு , அன்பின் மகேஷ் பொய்யாமொழி , டிஆர்பி ராஜா , எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூபாய் 655.44 கோடி மதிப்பீட்டில் 12, 653 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் கரங்களால் வழங்கினார். அதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் நிறைவடைந்த 71 கட்டிடங்களை திறந்து வைத்தார். முன்னதாக முதலமைச்சருக்கு அமைச்சர் மெய்நாதன் செங்கோல் வழங்கினார்.
அமைச்சரிடம் காசோலையை திருப்பிக்கொடுத்த மீனவர்
இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அப்படியிருக்க இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் ரமேஷ் என்பவர் விழா மேடையிலேயே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்துப் புகார் அளித்ததும், பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்டதுடன், காசோலையை அமைச்சரிடம் திருப்பி கொடுத்த மீனவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து சம்மந்தப்பட்ட மீனவர் ரமேஷ் தெரிவிக்கையில் என்னை யாரும் தாக்கவில்லை. பெயர் தவறாக இருந்தது ஆகவே தான் காசோலையை திருப்பிக்கொடுத்தேன். தற்போது பெயரை சரியாக கொடுத்துவிட்டனர். நானும் காசோலையை பெற்றுக் கொண்டேன் என்று ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார்.