"என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்" அண்ணாமலை பாதயாத்திரை! வாழ்த்து சொன்ன அமைச்சர் சேகர் பாபு!

ம.பா.கெஜராஜ்,
என்ற தலைப்பில் பா.ஜ.க சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. நடைபயண தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் வந்து தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்நிலையில் அண்ணாமலை நடைபயணம் குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் ''ஒருவேளை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காக, மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த நடைபயணத்தை மேற்கிறாரோ? எனத் தெரியவில்லை. ஆனால், நடைபயணம் மட்டுமல்ல, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவருடைய நடைபயணத்திற்கு வாழ்த்துக்கள்'' என்று கூறியிருக்கிறார்.
அண்ணாமலை பேட்டி நடைபயணத்துக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:- ராமேசுவரத்தில் பா.ஜனதா கட்சியின் சார்பில் பாதயாத்திரை தொடங்க இருக்கிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார். இதுபோல், பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரண்டு வருகிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, "என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்" என்ற பெயரில் இந்த பாதயாத்திரை நடக்க இருக்கிறது. தமிழகத்தில் 5 பகுதியாக நடக்கும் இந்த யாத்திரையின் மூலம் 234 தொகுதிகளுக்கும் செல்கிறோம். மூத்த தலைவர்கள் இதனை வழிநடத்துவார்கள். ஆகஸ்டு 22-ந்தேதி வரை நடக்கும் முதல் பகுதி யாத்திரைக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். கட்சியின் மாநில தலைவராக நான் எல்லா இடத்திலும் கலந்துகொள்கிறேன்.
ஊர்ப்பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பஸ் மூலம் 900 கி.மீ. தூரமும் இந்த யாத்திரை நடக்கும். 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதில் பங்கேற்க கூட்டணி தலைவர்கள் எல்லோரையும் அழைத்திருக்கிறோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவர் வேறு ஒரு நாளில் கலந்துகொள்வார். 3-வது முறையாக மோடி பிரதமராக ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காகவும், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காகவும்தான் இந்த யாத்திரை நடக்கிறது.
இது பா.ஜ.க யாத்திரை என்று சொல்வதைவிட மோடி மீண்டும் பிரதமராவதற்கு தமிழக மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. யாத்திரையின்போது, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், கடந்த 9 ஆண்டு கால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேசப்படும். யாத்திரையின் தொடக்க விழாவில் மோடி என்ன செய்தார்? என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்படுகிறது. ராமேசுவரத்தில் ஒரு லட்சம் புத்தகம் வினியோகிக்கப்பட இருக்கிறது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், மோடி ஆட்சியில் வந்துள்ள மாற்றங்கள் குறித்தும் பேசப்படுகிறது. யாத்திரையின்போது 10 மாநகரங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. அந்த கூட்டங்களில் சில முக்கியமான தலைவர்கள் வருகிறார்கள். எல்லா பொதுக்கூட்டங்களிலும் மத்திய அரசின் சார்பாக மத்திய மந்திரிகள் வருவார்கள். குறிப்பாக எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த திட்ட பயனாளிகள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த துறை சார்ந்த மந்திரிகள் வர இருக்கிறார்கள். நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என கட்சி நினைக்கிறது. மீனவர் பிரச்சினை ராமேசுவரத்தில் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு செய்தது என்னென்ன? என்பது பற்றி பேச இருக்கிறோம்.
தி.மு.க. ஊழல் பட்டியல் குறித்து கவர்னரிடம் ஆவணங்களுடன் பெட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 6 அமைச்சர்கள் உள்பட அவர்களின் பினாமிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கவர்னரிடம் கொடுத்திருக்கிறோம். பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஊழல் குறையும். எழுதி கொடுப்பதைத்தான் முதல்-அமைச்சர் ஆக்ரோஷமாக வாசிக்கிறார். அமைச்சர் பொன்முடியின் 41 கோடி ரூபாய் வைப்பு நிதி குறித்து அவர் ஏன் பேசுவதில்லை? வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்.
¢ தி.மு.க. ஊழல் பட்டியலை வெளியிட்டதற்காக எங்கள் மீது தி.மு.க. கோபத்தை காட்ட நினைத்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம். இவ்வாறு அவர் சொன்னார்.
இந்த நடைபயண தொடக்க விழாவுக்காக டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணி அளவில் தனி விமானத்தில் மத்திய மந்திரி அமித்ஷா புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு 4.50 மணிக்கு சென்று இறங்குகிறார். பின்னர் ஒரு ஓட்டலில் சற்றுநேர ஓய்வுக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, நடைபயண தொடக்க விழா மேடைக்கு மாலை 5.45 மணி அளவில் வந்து கலந்துகொண்டு பேசுகிறார். விழா நிறைவுக்கு பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பும் அவர், இரவில் அங்கு தங்குகிறார். நடைபயண தொடக்க விழாவுக்காக நாடாளுமன்ற வடிவில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்தன. சாலையின் இருபுறமும் பா.ஜ.க கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.