5 ஆயிரம் கிடா வெட்டி 2.5 லட்சம் பேருக்கு விருந்து!

5 ஆயிரம் கிடா வெட்டி 2.5 லட்சம் பேருக்கு விருந்து!

  டி.இ.முகமது இர்பான்,

  திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் பங்கேற்ற இளைஞரணியினர், கட்சியினருக்கு தரமான உணவு வழங்கப்பட்டன. இதற்காக மாநாட்டு பந்தலின் வலது புறத்தில் 2 இடங்களிலும், இடது புறத்தில் மிக நீளமான சமையல்கூடமும் அமைக்கப்பட்டு, சமையல் செய்யும் பணி நேற்று முன்தினமே தொடங்கி நடந்தது. சைவ உணவு வகையான வெஜிடெபிள் பிரியாணி, பிரட் அல்வா, கோபி 65, தயிர்சாதம், ஊறுகாய், கத்திரிகாய் தொக்கு போன்றவை வழங்கப்பட்டது. அசைவ உணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, கத்திரிகாய் கட்டா, தயிர் சாதம், ஊறுகாய் ஆகியவை வழங்கப்பட்டன. மாநாட்டு சமையலுக்காக 5 ஆயிரம் ஆடுகள், 15 ஆயிரம் கோழிகள், 30 டன் காய்கறிகள் கொண்டுவரப்பட்டது.

 100 சமையல் மாஸ்டர்கள், அவர்களுக்கு 500 உதவியாளர்கள், இதர பணிக்கு 6,500 தொழிலாளர்கள் என சமையல் பணியில் மட்டும் 7 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். சமையல் பணியை 10 டிரோன் கேமராக்கள் மூலம் அதற்கென ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கண்காணித்தனர். 2 லட்சம் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அசைவமும், 50 ஆயிரம் நிர்வாகிகளுக்கு சைவ உணவும் வழங்கப்பட்டது. உணவு ருசியாக, தரமாக இருந்ததாக தொண்டர்கள் தெரிவித்தனர்.அதே போல், மாநாட்டில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொரியல், வடை, பாயசம் உள்ளிட்ட 21 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.