பள்ளி சிறுவர்களை வைத்து கள்ளச்சாராய வியாபாரம்! மாமுல் பெற்றுக் கொண்டு வேடிக்கை!

ம.பா.கெஜராஜ்,

 விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவகிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். ஆகவே அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு, பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது. கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். 

  இதனால் பதட்டம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்போது ஆட்சியர் பழனி, டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

  எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தது.

   இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது, மேலும் வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

 கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

 குறிப்பாக, வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 குறிப்பு:- இந்த புள்ளி விவரங்களை போலிஸ் தரப்பில் தெரிவிக்கும் அதே நேரத்தில், மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு (கலால்) ஆய்வாளராக பணியில் சேர வேண்டுமெனில் பெரும் பணம் செலவழிக்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.

 குறிப்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எடுத்துக்கொண்டால் சொந்த ஊரிலேயே கலால் இன்ஸ்பெக்டராக சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு பெண் இன்ஸ்பெக்டர் பெரும் பணம் கொடுத்து இந்த பதவியை பெற்றதாக அரசியல் வாதி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு சொல்லி வருகிறாராம். அதே போல் தான் பல இன்ஸ்பெக்டர்கள் சாக்கு சொல்லி கலெக்ஷனில் கறார் காட்டுகிறார்கள்.

 ஆகவே தான் கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

 அதே போல் பள்ளிக்கூட சிறுவர்களை வைத்து கள்ளச்சாராய வியாபாரம் களைகட்டுகிறது. இதற்கெல்லாம் மாமுல் போலிசே காரணம். கடந்த மாதம் அப்படி ஒரு புகார் மாவட்ட எஸ்.பி.க்கு கொண்டு செல்லப்பட்டதும், அவர் சம்மந்தப்பட்ட ஸ்டேஷனை அலார்ட் செய்துள்ளார். அவர்களோ ஓடிப்போய் சிறுவனை வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களிடம் கூடுதல் மாமுல் பெற்று சென்றுள்ளார்கள்.

 போலிஸ் நினைத்தால் ஒரே நாளில் நூறு பேரை கைது செய்தோம் என்கிறார்கள். அப்படியானால் இதுநாள்வரை கள்ளச்சாராய விற்பனை அவர்களுக்கு தெரியாமல் போனதா என்கிறார்கள்.

  அதுமட்டுமில்லீங்க குடியாத்தம் சப்டிவிஷனுக்குட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட மலையடிவார கிராமங்களில் கள்ள சாராயம் பக்காவாக காய்ச்சப்படுகிறதாம். இதெல்லாம் சப்டிவிஷன் அதிகாரிக்கு நன்கு தெரியுமாம். அதிலும் தற்போது திருவிழா காலம் என்பதால் சாராய உலைகள் அதிகமாக போட்டிருக்கிறார்களாம்.

  இது குறித்து போலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியவர்கள் அப்படியே மூடி மறைத்துவிட்டு பங்கு பெறுகிறார்களாம்

  ஆக, இப்படியெல்லாம் இருந்தால் கள்ளச்சாராய பலிகள் ஏன் நடக்காது என்பதே பொதுமக்களின் விணா?