நீதிமன்ற அவமதிப்பு புகார்! ஜூலை 11 பொதுக்குழு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தானா?

ம.பா.கெஜராஜ்,
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான கே.பழனிச்சாமியின் கட்சி நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் அந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
இந்த மாத துவக்கத்தில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று எழுந்த சர்ச்சை தற்போது மாத இறுதியில் பெரும் ரகளையாக மாறியிருக்கிறது.
23 ஆம் தேதி அக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட அதிகார பூர்வ பொதுக்குழுவில் அடாவடி தீர்மானம் நிறைவேற்ற முயன்றதன் விளைவு ஓ.பி.எஸ். தரப்பு நீதிமன்றத்தின் வாயிலை தொட்டனர். அதனால் சில அதிரடி உத்தரவுகளை நீதிமன்றம் பிரப்பித்தது.
அவ்வாறு துவங்கிய சட்ட போராட்டம் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அளவுக்கு நீண்டுவிட்டது.
அதாவது அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்து அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஜூலை 11-ல் பொதுக்குழு கூடும் என அறிவித்தும் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கையெழுத்திட்டு ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு, இணை
ஒருங்கிணைப்பாளர் கே.பழனிச்சாமிக்கு எதிரான மனு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அப்போ 11 ஜூலை பொதுக்குழு நடவடிக்கை புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தானா?
பன்னீர் தரப்பு பெட்டிஷனுக்கு பழனிச்சாமி தரப்பு கவுன்டர் பெட்டிஷன்
இது ஒருபுறம் இருக்க ஓ.பன்னீர் செல்வத்தை ஓதுக்கி விட்டு பழனிசாமியின் ஆதரவாளர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்காமல் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பழனிசாமி அணியினர் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட்டு வரும் நிலையில் எனது ஒப்புதலின்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அளித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வில் சட்ட விதி மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன என்றும் தனது கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட நடவடிக்கைகள் அரசியல் களத்தில் தனி கவனம் பெற்றுள்ளது.
ஆனால் இதனை தேர்தல் ஆணையத்தில் நிரூபிப்போம் என்று பழனிச்சாமி தரப்பினர் நம்புகின்றனர்.
அதற்காக தயார் செய்யப்படும் கவுன்டர் பெட்டிஷனில், முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையும், பின்னர் அவரை நீக்கியதையும் முன்னுதாரணமாக குறிப்பிட்டும் இந்த பதில் மனுவில் பல்வேறு தகவல்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.