பஞ்சாயத்து கிளார்க் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

பஞ்சாயத்து கிளார்க் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

ஜி.கே.சேகரன்,

 வருமானத்துக்கு அதிகமாக  சொத்து சேர்த்ததாக பஞ்சாயத்து கிளார்க் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார். 

இவர் 2011 -  2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு  வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.