சி.எம்.சி.மருத்துவமனையில் மீண்டும் ஆம்புலன்ஸ் சர்ச்சை!2009 சம்பவத்தை மறக்க முடியுமா?

சி.எம்.சி.மருத்துவமனையில் மீண்டும் ஆம்புலன்ஸ் சர்ச்சை!2009 சம்பவத்தை மறக்க முடியுமா?

ம.பா.கெஜராஜ்,

 வேலூரில் கடந்த "2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி" ஆம்புலன்ஸ் வாகனத்தை மையப்படுத்தி பெரிய சர்ச்சையே ஏற்பட்டது. இந்த தினத்தை வேலூர் மக்களும் சரி, சிஎம்சியும் நிர்வாகமும் கூட அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.

 வேலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியை பொறுத்த வரை அதற்கு வெளியில் ஆம்புலன்ஸ், டூரிஸ்ட் வேன் மற்றும் டூரிஸ்ட் கார்கள் என வரிசையாக காத்துக் கொண்டிருக்கும்.

 மேற்கு வங்கம், சட்டீஸ்கர் மும்பை போன்ற வட மாநிலங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இந்த வாகனங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

  அதில் சிகிச்சைக்கு வருபவர்களில் சிலர் இறக்க நேரிடும் போது அவர்களது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்படும். டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களுக்கும் ஆம்புலன்ஸ் தேவைப்படும். அதில் மேற்படி நிர்வாகம் சார்பாக பி.ஆர்.ஓ ஜான் சேகர் தலையிட்டு நாங்கள் அனுமதிக்கும் வாகனம் மட்டுமே இங்கிருந்து உடல்களை ஊருக்கு எடுத்துச் செல்ல அனுமதிப்போம்.

 நாங்கள் அனுமதிக்காத அதாவது எங்களிடம் ஒப்பந்தம் போடாத ஆம்புலன்ஸ்களை நாங்கள் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டார்.

 இதனால் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், இடைத்தரகர்கள் என பல குடும்பத்தினர் வருமானம் இழந்தனர்.

  இதனால் பிஆர்ஓ ஜான் சேகரின் உயிர் பறிபோகும் அளவுக்கு நிலமை போனது.  இந்நிலையில் அந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போல் ஆம்புலன்சை மையப்படுத்தி சிஎம்சி மருத்துவமனையில் ஒரு சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது.

  சிஎம்சி மருத்துவமனை ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரத்தில் புதிய கேம்பசை திறந்து இருக்கிறது. அங்கு வைத்து தான் 16 மே 2024 ஆம் தேதி அன்று ஒரு பிரச்சனை வெடித்தது.

 மேற்கு வங்கம் மாநிலம், புருளியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதன்ராய். இவர் ரத்த புற்றுநோய் காரணமாக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இறந்து விட்டார். ஆகவே சதன்ராயன் உடலை சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல முடிவெடுத்துஆஸ்பத்திரிக்கு வெளியில் இருந்த ஆம்புலன்சில் உடலை எடுத்துச்செல்ல பிரிசர் ஃபாக்ஸோடு சேர்த்து 60 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட சதன்ராய் குடும்பத்தினர் அவர்களது லக்கேஜ் மற்றும் பொருட்களை ஆம்புலன்சில் ஏற்றிவிட்டனர். 

 அதற்குள் சிஎம்சி பெயரை சொல்லி ஒரு சிலர் அந்த குடும்பத்தினரை தடுத்து எங்களிடம் ஒப்பந்தம் வைத்திருக்கும் ஆம்புலன்ஸ் மூலமாக தான் உடலை எடுத்துச்செல்ல அனுமதிப்போம், அதற்கு பிரிசருடன் சேர்த்து 85 ஆயிரம் செலவு பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

 இதை ஒப்புக் கொள்ளாத சதன்ராய் குடும்பத்தினர் சிஎம்சி மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர்.அதைப் பார்த்த சிஎம்சி மருத்துவமனை செக்யூரிட்டி உள்ளிட்ட சிலர் சதன்ராயின் உறவினரை வலுகட்டாயமாக உள்ளே அழைத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த மருத்துவமனை அருகே பெரும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர் போலிசார் வந்து பிரச்சனையை அப்போதைக்கு முடித்து வைத்தனர்.

 இது குறித்து வெளியில் உள்ள ஆம்புலன்ஸ்காரர்கள் தெரிவிக்கையில்,

  சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு தேவையான மொத்த உதவிகளையும்  நாங்க தான் செய்து கொடுக்கிறோம். நியாயமான ரேட்டில் எங்கு ரூம்  கிடைக்கும், காய்கறி, மளிகை எங்கு வாங்கணும், எப்படி பேசணும், என வேலூர் சூழ்நிலை அனைத்தும் அவங்களுக்கு சொல்கிறோம். அவர்கள் டிசார்ஜ் ஆகி போற வரைக்கும் நாங்க இலவசமாக ஹெல்ப் பண்றோம்.

 அப்படி வருபவர்களில் யாராவது இறந்து விட்டால், அவர்களது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்படும்.

  யாரோ ஒருத்தர் ரெண்டு பேரு இறக்கும்போது எங்க ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போறோம். அதேபோல் டிஸ்சார்ஜ் ஆகி திரும்புவர்களையும் அழைத்துச் செல்கிறோம். அவங்களும் எங்களை தேடி வராங்க. அதை இவங்க தடுத்து எங்கள் பிழைப்பில் மண் அள்ளி போடுகிறார்கள்.

 வெளியில ஆம்புலன்ஸ் எடுத்தால் டிஸ்சார்ஜ் சான்று மற்றும் டெத் சர்டிபிகேட் கொடுக்கமாட்டோம் என்று நோயாளி தரப்பினரை மிரட்டி பணிய வைக்கிறார்கள். பேஷண்டுகளை அழைத்து வரும் போது மட்டும் எங்கள் ஆம்புலன்ஸை உள்ளே அனுமதிக்கிறார்கள். ஆனால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகளை அழைத்துச் செல்ல எங்கள் வண்டியை சிஎம்சி மருத்துவமனையினுள் அனுமதிப்பதில்லை.

  நாங்கள் சொல்கிற ஆம்புலன்சில் தான் போகனும் என்று அவர்கள் சொல்வது என்ன நியாயம்.  

 நாங்கள் வைத்துள்ள ஆம்புலன்ஸ் வண்டிகளில் அனைத்து வசதிகளும் உள்ளது. நாங்கள் மேற்கு வங்கத்துக்கு சென்று வர பிரிசர் ஃபாக்ஸோடு சேர்த்து 60 ஆயிரம் ரூபாய் வாங்குகிறோம்.

 சில மாதங்களுக்கு முன்னர் கோவையிலிருந்து ஒன்னரை வயது குழந்தையை இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவர்களால் தொடர்ந்து பணம் செலுத்தி சிகிச்சை பார்க்க முடியாததால் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அதற்காக ஆம்புலன்ஸ் உதவி கேட்ட பொழுது குத்தகையில் உள்ள ஆம்புலன்ஸ்காரர்கள் பணம் கொடுத்தால் தான் வருவோம் என்று சொன்னதால்,  பணம் ஏதும் இல்லாத அவர்கள் எங்களை நாடினர்.         

  வெளியில் உள்ள ஆம்புலஸ்காரர்களாகிய நாங்கள் எங்கள் சொந்த பணத்தை போட்டு இலவசமாக அவர்களை கோயம்பத்தூருக்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு வந்தோம்.  

 வெளி ஆம்புலன்ஸ் என்று பார்த்தால் 12 வண்டிகள் உள்ளன. இதன் மூலமாக சுமார் 150 பேர் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எங்களுக்கும் வாய்ப்பளித்து, இந்த தொழிலை நம்பியிருக்கும் எங்கள் வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம் என்றார்கள்.    

 குத்தகைதாரரான ஏபிஎல் உரிமையாளர் பழனி கூறுகையில், 

 சிஎம்சியின் உள்ளே ஏபிஎல், கே.ஜி.எஸ், ஆர்.டி.பி., ஆர்.கே. என்கின்ற ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு வைத்திருக்கிறோம்.

 இதற்காக  சிஎம்சி நிர்வாகம் எங்களிடம் பணம் எதுவும் பெறவில்லை.

குறிப்பாக அவர்கள் கூறியிருப்பது போல 85 ஆயிரம் ரூபாய் பணத்தை நாங்கள் கேட்கவே இல்லை.

 மேற்கு வங்கத்திற்கு என்றால் கிலோ மீட்டருக்கு 17 ரூபாய் 50 காசு என போகவார சேர்த்து கிலோமீட்டருக்கு 35 ரூபாய் ரேட் நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

சுமார் 2000 கிலோமீட்டர் பிடிக்கும் என்றால் 70 ஆயிரம் ரூபாய் தான் மொத்தமே வருகிறது. (பிரிசர் ஃபாக்ஸ் இல்லாமல்)

அப்படி இருக்க நாங்கள் எதற்காக 85 ஆயிரம் கேட்கப் போகிறோம் ஆகவே அந்த பேஷண்ட் தரப்பில் சொல்லப்படுவது தவறான தகவல் ஆகும்.

 அதேபோல் வெளியில் உள்ள ஆம்புலன்ஸ்காரர்களும் தொழில் செய்து வருகிறார்கள், நாங்கள் அவர்களை எதுவும் குறை சொல்லவில்லை. இருந்தாலும் உள்ளே இருக்கும் சில புரோக்கர்கள் தான் இது போன்ற வேலையை செய்து சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.

 அது மட்டும் இன்றி நாங்கள் யாருக்கும் கமிஷன் தருவதும் கிடையாது. மேலும் ஐந்து வருடத்திற்கு உட்பட்ட புது ஆம்புலன்ஸ் மட்டும் தான் சிஎம்சி நிர்வாகத்தில் ஒப்பந்தம் போடுகிறார்கள். ஏனென்றால் காடு, மலை, மேடு போன்ற வழியில் செல்லும்போது வாகனம் பாதி வழியில் நின்று விடக்கூடாது என்பதனாலேயே இந்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மத்தபடி இதில் எந்த முறைகேடும் இல்லை என்கிறார்.

  மேலும் இது குறித்து சிலரிடம் விசாரிக்கையில் சிஎம்சி மருத்துவமனையில் உள்ள ஏ.எல்.எஸ். ஊழியர்களும், டிராவல்ஸ் டெஸ்க்காரர்களுமே இவ்வளவுக்கும் காரணம். மருத்துவமனையில் இறப்பு ஏதும் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் காரர்களை வார்டுக்கே இவர்கள் அனுப்பிவிடுகிறார்கள். ஆக இது சிஎம்சி நிர்வாகத்தினரின் பார்வைக்கு செல்வதில்லை என்கின்றனர்.

  இந்த சர்ச்சை தொடர்பாக வெளியில் உள்ள ஆம்புலன்ஸ்களுக்கும் சுழற்சி முறையில் வாய்பளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பலரின் அவா!

 இது குறித்தெல்லாம் சிஎம்சி நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் கேட்க முயன்ற போது பிரஸ்மீட் வைத்து முழு தகவலையும் தெரிவிப்பதாக சொன்னார்கள். அப்படி அவர்கள் தரப்பு விளக்கத்தை சொல்கின்ற பட்சத்தில் அந்த தகவலை உடனடியாக லைவ்லுக்கில் பிரசுரிக்கப்படும். 

   சிஎம்சி நிறுவனர் டாக்டர் ஜடாஸ்கடர் அவர்களுக்கு இன்று 64 ஆம் ஆண்டு நினைவு தினமாகும்.

  மருத்துவமனையின் வெளியில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தினர் ஒன்றினைந்து டோல்கேட் கல்லரைத் தோட்டத்தில் உள்ள ஐடா அம்மையாரின் கல்லரைக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.