அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் கொலைவழக்கில் கைது!

அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் கொலைவழக்கில் கைது!

டி.இ.முகமது,

 மளிகைகடைகாரரை வெட்டி கொலை செய்த வழக்கில் அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் அவரது கணவருடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். திம்மராஜிக்கு புஷ்பா என்ற மனைவியும், தீக் ஷிதா என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்நிலையில்கடந்த 5-ந் தேதி அவர் தனது கடை அருகில் உள்ள டீக்கடையில் டீ அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு வந்த 3 பேர், திம்மராஜை கத்தியால் சரமாரியாக குத்தியும், இரும்புக் கம்பியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பினர்.

 கொலைசம்பவம் தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையேஓசூரை சேர்ந்த கிரண், ராஜ்குமார், மூர்த்தி ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஓசூர் அருகே நல்லூரை சேர்ந்த ராகேஷ், பேகே பள்ளியை சேர்ந்த ஸ்ரீதர், அவருடைய மனைவி சுவேதா  மற்றும் கொலையாளிகளுக்கு ஆயுதங்கள் வினியோகம் செய்த பேரிகையை சேர்ந்த முரளி ஆகிய 4 பேரையும் ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.

 இவர்களில் ராகேஷ், ஸ்ரீதர், முரளி ஆகியோரை தர்மபுரி கிளை சிறையிலும், சுவேதாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, திம்மராஜ் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி, பேகேப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் நாகரத்தினா, அவருடைய கணவர் முனிராஜ்  மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேரை ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

 இதுவரை இந்த கொலைவழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரணடைந்து உள்ளனர்.