தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை மகாராஷ்டிரா காட்டில் 40 நாட்கள் கட்டிவைத்து கொடுமை!

ம.பா.கெஜராஜ்,
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் கணவரே அவரை கட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட அந்த பெண், ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகக் கூறப்படுகிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
நேற்று முன்தினம் கரடி மலை வனப் பகுதி வழியாகச் சென்ற விவசாயிகள் மற்றும் மாடு மேய்ப்பவர்கள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
அந்த பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரை பார்த்த விவசாயிகள் அச்சமடைந்தனர். உடனே அருகில் உள்ள கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
பின்னர் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை சுற்றி பரிசோதித்து, அவரின் காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை உடைத்து அவரை விடுவித்து, சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றனர்.
அதன் பிறகு, அந்தப் பெண் மீட்கப்பட்டு சாவந்த்வாடியில் உள்ள உபாசிலா மருத்துவமனையில் முதன்மை சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த சமயத்தில், உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்ததால் அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருந்த போதும் அந்த பெண்ணால் சரியாக பேச முடியவில்லை. அவருக்கு ஒருவித ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் தாடை பகுதியை அவரால் அசைக்க முடியவில்லை. அவரால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து சவந்த்வாடியில் உள்ள அப்ஜிலா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் நேற்று காலை (ஜூலை 28) அவர் மேல் சிகிச்சைக்காக ஓரோஸில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பல நாட்களாக எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் இருந்ததால் அவர் மிகவும் பலவீனமாகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அந்த பெண்ணால் சரியாக பேச முடியாததால் அதிகாரிகளிடம் எழுதி காண்பிக்க, பேனா மற்றும் பேப்பரை கேட்டு தனக்கு நேர்ந்ததை எழுதி காண்பித்தார்.
தன்னை சங்கிலியால் கட்டிப்போட்டது தன் கணவர் தான் என்று அவர் எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார். 40 நாட்களாக வனப்பகுதியில் உணவு, தண்ணீர் இல்லாமல் இந்த நிலையில் இருந்ததாக பேப்பரில் இந்த பெண் ஒரு கோரிக்கையை எழுதி வைத்துள்ளார்.
மேலும், "என் கணவர் என்னை மரத்தில் கட்டிவைத்து விட்டு என் வாழ்க்கை இங்கே முடிந்துவிடும் என்று ஓடிவிட்டார். நான் பாதிக்கப்பட்ட பெண். தற்போது உயிர் பிழைத்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிந்த போலிசார், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பெண் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் மீட்கப்பட்ட சமயத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பது போன்று தெரிந்ததாக காவல் அதிகாரி ஒருவர் சொன்னார்.
மேலும் இந்த பெண் இதற்கு முன்பு டெல்லி, மும்பை, கோவா போன்ற இடங்களில் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இருந்துள்ளது.
அவரது கணவர் தமிழ்நாட்டில் இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். அவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஒரு குழுவையும் தமிழ்நாட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அவர் பிடிபட்ட பின்னரே உண்மை என்னவென்று தெரியவரும்.