பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ரூ.215 கோடியில் திட்டம்! ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அடிக்கல் நாட்டினார்! வறட்சியை நோக்கி வட மாவட்டங்கள்!

பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ரூ.215 கோடியில் திட்டம்! ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அடிக்கல் நாட்டினார்! வறட்சியை நோக்கி வட மாவட்டங்கள்!

 ஜி.கே.சேகரன்,

 ம.பா.கெஜாராஜ்,

 ரூ.215 கோடியில் ஆந்திர அரசு பாலாற்றில் பெரிய தடுப்பணையை கட்ட திட்டமிட்டிருக்கிறது. அதற்காக அம்மாநில முதலமைச்சர் இன்று பிப் 26 குப்பம் பகுதிய்ல் அடிக்கல் நாட்டினார்.

   ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள ராம குப்பத்தில் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கும் பணிக்காக வெட்டப்பட்ட கால்வாயில் கிருஷ்ணா நதிநீர் கொண்டு வரப்பட்ட திட்டம் நிறைவடைந்த நிலையில், இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று அதை தொடங்கி வைத்தார்.  அதே போல் குப்பம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் பாலாற்றின் குறுக்கே கனேசபுரத்தில் அணைக்கட்டும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

 இந்த நிகழ்வு தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அம்ய்ந்திருக்கிறது.

 ''கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரா வழியாக தமிழகத்துக்குள் நுழையும் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. 93 கிலோ மீட்டர் பாயும் கர்நாடகத்தில் 3 தடுப்பணைகளும், 14 ஏரிகளும் கட்டப்பட்டு மொத்தம் 17 இடங்களில் பாலாற்று நீர் சேமிக்கப்படுகிறது.

  அதேபோல் 33 கிலோ மீட்டர் பாயும் ஆந்திரத்தில் 22 தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது.     

 ஆனால் தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் பாயும் பாலாறு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவளூர் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை கடக்கிறது. இதில் வாலாஜா அருகில் 1858ஆம் ஆண்டில் கட்டப் பட்ட ஒரே தடுப்பணை தான் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

 ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில், கர்நாடகா 20 டி.எம்.சி-யும், ஆந்திரா 20 டி.எம்.சி-யும், தமிழ்நாடு 40 டி.எம்.சி-யும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என மூன்று மாநிலங்களும் ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

   இச்சூழலில், பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில்வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. அப்படியிருக்க மேலும் ஒரு தடுப்பணை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டிருக்கிறது.

  அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பிப் 26 குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.  புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

  பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய பிரச்சனையில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளது. மேலும், பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

 இப்படி பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டியிருக்கும் ஆந்திர அரசின் அத்துமீறல் செயலை பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு, மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

  தமிழக அரசு இதை சட்டபடி தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.