அமைச்சர்களை வளைக்கும் வழக்குகள்! திமுகவுக்கு நெருக்கடியா!

ம.பா.கெஜராஜ்,
சமீபகாலமாக தமிழக அமைச்சர்களில் சிலரை வழக்குகள் வளைத்து போட்டு வருகிறது. இதனால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படக்கூடுமா என்கிற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டின் தற்போதைய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, 2006-2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்துவந்தார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியான சி.கணேசன் என்பவருக்கு¢ வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு மனை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு மார்ச் 10ஆம் தேதியே அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டது.
ஆனால், கணேசன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு ஒன்றில் 1,180 ரூபாய் வாடகைக்கு குடியிருந்ததை பின்னாள் வந்த அதிமுக அரசு கண்டுபிடித்தது. அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்கு பதிவு செய்து வழக்கு நடைமுறையில் இருந்தது.
சிறப்பு நீதிமன்றதில் நடந்த இந்த வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை 2023 மார்ச் 17ஆம் தேதி விடுவித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்..
இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைக்கு பின்னர் பிப் -26ரிந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட மூவர் மீதான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை தினமும் நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். யாராவது வழக்கை இழுத்தடிக்க முயற்சி செய்தால் அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை அவ்வப்போது சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி,
கடந்த சில மாதங்களில் மத்திய சட்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளின் மூலம் பின்னடைவைச் சந்திக்கும் மூன்றாவது தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி. இதற்கு முன்பாக, மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முந்தைய ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை பணியிடங்களை நிரப்புவதற்கு பணம் பெற்றுக்கொண்டது தொடர்பான குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார். தற்போதுவரை ஜாமீன் கிடைக்காத நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பொன்முடி,
அவரை தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது அமைச்சர் பதவி பறிபோனது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,
தற்போதைய வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் கே.பொன்முடி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முடித்துக்கொள்ள முடிவுசெய்ததை எதிர்த்து, வழக்கை விசாரிக்கிறது நீதிமன்றம். பொன்முடி வழக்கைப் பொறுத்தவரை, அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கை விசாரிக்கிறது நீதிமன்றம்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழக்குகளில், ஆட்சி மாற்றத்தின் பிறகு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கை முடித்துக் கொள்ள முடிவு செய்ததால்தான், வழக்குகளில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை அப்படி முடிவு செய்தது சரியா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையின் முடிவை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது சரியா என்பதையும் தான் விசாரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இப்படி அமைச்சர்கள் மீதான முடித்துவைக்கப்பட்ட வழக்குகள் மீண்டும் உயிர்பெற்று வருவது திமுக வுக்கு சற்றே நேருக்கடியை கொடுக்கும் என்றே கருதப்படுகிறது. இருந்தாலும் இதெல்லாம் மக்களவை தேர்தலில் எதிரொலிக்காது.
இங்கு ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும், அதில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்ததை எதிர்த்து தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி மீதான வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதை எப்படி புரிந்து கொள்வதோ?