கேரளாவில் 108 வயது பாட்டி பரிட்சையில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்றார்!

கேரளாவில் 108 வயது பாட்டி பரிட்சையில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்றார்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மூதாட்டி கேரளா பாடபடிப்பில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார்.

  தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி (வயது 108). இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிழைப்பிற்காக கேரள மாநிலம் வண்டன்மேடு பகுதிக்கு சென்று அங்குள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலைசெய்து வருகிறார்.

   இவருக்கு 5 குழந்தைகள். கணவர் இறந்துவிட்ட பிறகு 2 மகன், 3 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார். தற்போதும் இவர் பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள் என 5 தலைமுறைகளை கடந்தும் தோட்ட வேலைக்கு சென்று வருகிறார்.

  2ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கமலக்கன்னிக்கு தன்னால் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வந்துள்ளது.

  கேரள மாநிலத்தில் வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் புதிய எழுத்தறிவு மற்றும் தொடர் கல்வி திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி உள்ளது.

  அனைவருக்கும் கல்வி மற்றும் எப்பொழுதும் கல்வி என்ற முழக்கத்தை பரப்பி தொடர்கல்வி முயற்சியை கேரளா தொடங்கி சம்பூர்ணா சாஸ்த்ரா என்ற எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுத்துப்பயிற்சி மற்றும் கையெழுத்து பயிற்சி, வாசிக்கும் திறன் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

  இந்த படிப்பை முடித்தவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்று வழங்கப்படும். அந்த வகையில் கமலக்கன்னி தேர்வில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்றார்.

   இந்த திட்டத்திற்கு முன் உதாரணமாக திகழ்ந்த மூதாட்டியை பஞ்சாயத்து நிர்வாகமும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.