சசிகலா...ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பு!இறங்கி வந்தார் எடப்பாடி!!

ம.பா.கெஜராஜ்,
சசிகலா...ஓ.பி.எஸ். தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி தன் பிடிவாதத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது தனியாக குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்று அவர் ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவித்துள்ளதை அதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள்.
மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக, தற்போது 9 நாள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாண்டி உள்ளிட்ட 40 மக்களவை தொகுதி நிர்வாகிகளை லிஸ்ட் போட்டு சந்தித்து வருகிறது அக்கட்சியின் தலைமை.
ஜூலை 10 ஆம் தேதி தொடங்கிய இந்த சந்திப்பு 19 ஆம் தேதிவரை நடைபெறும். இதில் தொகுதி நிர்வாகிகள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் ¢ ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு வருகிறார்.
முதல் நாளில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுநாளில் இருந்து தினமும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து தோல்விக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராய்ந்தார்.
இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் நெல்லை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் முக்குலத்தோரை மையப்படுத்தி கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகம் இருப்பதால் அவர்களது வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை கட்சியினர் முன் வைத்திருக்கிறார்கள். எனவே சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சி யில் யில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும்.
அவர்களை கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்கிற பேச்சு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது எனவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வற்புறுத்தி கூறியுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் முக்குலத்தோர் சமுதாய மக்களிடமிருந்து அ.தி.மு.க. விலகியே நிற்பதாகவும் வெளியில் பேசப்படுகிறது என்றும் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் இந்த கருத்தை பொறுமையுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிட்டீர்கள். அவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது தனியாக குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் சசிகலா-ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
தென்மாவட்ட நிர்வாகிகள் கொடுத்த நெருக்கடியா அல்லது வேறு ஏதேனும் நெருக்கடியா என்று ரத்தத்தின் ரத்தங்கள் சற்று குழம்பித்தான் போயிருக்கிறார்.