எம்.ஜி.ஆரை திமுக ஆட்சியில் அவமதிக்கிறார்கள்! ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை கொடுத்தவர்! புகழ்ந்து தள்ளிய மோடி! அதிமுக வாக்குகளை அறுவடை செய்ய யுக்தி!

எம்.ஜி.ஆரை திமுக ஆட்சியில் அவமதிக்கிறார்கள்! ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை கொடுத்தவர்! புகழ்ந்து தள்ளிய மோடி! அதிமுக வாக்குகளை அறுவடை செய்ய யுக்தி!

ம.பா.கெஜராஜ்,

  எம்.ஜி.ஆரை  திமுக ஆட்சியில் அவமதிக்கிறார்கள், ஜெயலலிதா தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்தவர், கடைசிவரை மக்களுக்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் என்று பிரதமர் மோடி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசினார். அ.தி.மு.க. வின் வாக்குவங்கியை பாஜக பக்கம் இழுக்க அவர் இப்படி பேசியதாக பரவலாக பேசப்படுகிறது.

  தேர்தல் சீசன் தொடங்கிவிட்டதை அரசியல் கட்சி தலைவர்களின் வருகை உணர்த்துகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. 

 அந்த வகையில் முதல் நாள் (பிப்ரவரி 27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு அருகில் உள்ள மாதப்பூரில் மிகப் பெரிய பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோதி கலந்துகொண்டு பேசினார்.     முன்னதாக மோடி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மோதி, திறந்தவெளி காரில் ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார். வாகனத்தில் அவருடன் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உடனிருந்தனர்.

  தாமரை வடிவில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில், பா.ஜ.க. தலைவர்கள் போக, கூட்டணிக் கட்சியின் தலைவர்களான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களும் அமரவைக்கப்பட்டிருந்தனர்.

 ஆனால் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறும் எனக் கருதப்பட்ட அ.ம.மு.கவின் தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

   இந்தக் கூட்டத்தில் பிரதமருக்கு முன்பாக, எல். முருகனும், கே.அண்ணாமலையும் பேசினார். அண்ணாமலை பேசி முடித்த பின்னர் அவரை பலமாக தட்டி வெகு நேரம் பாராட்டினார் மோடி!

   மோதி தனது உரையில் தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதோடு, அ.தி.மு.கவின் மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோரையும் புகழ்ந்து பேசினார்.

  "இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. குறித்துதான் அதிகமாகப் பேசப்படுகிறது," என்று கூறிய அவர், தொடர்ந்து, "தமிழ்நாடு, நாட்டின் அரசியல் வளர்ச்சியில் புதிய ஒரு மையமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, வரும் 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு புதிய சரித்திரத்தைப் படைக்கப் போகிறது. பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் ஆதரவு வந்துகொண்டிருப்பதை நான் கவனித்து வருகிறேன்," என்றார்.

   மேலும் "தமிழ் மொழியும் கலாச்சாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதனால்தான் ஐ.நா. சபையில் பேசியபோது என்னைக் கவர்ந்த தமிழ்க் கவிதைகளை அங்கு பேசினேன். எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் காசி சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தினேன். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை நிறுவி, அதற்கு மிகப்பெரிய மரியாதையை கொடுத்திருக்கிறேன்,"

   "தமிழ் நாட்டில் பா.ஜ.க. எப்போதுமே ஆட்சியில் இருந்தது இல்லை. ஆனால், பா.ஜ.கவின் மனதில் தமிழ்நாடு எப்போதுமே இருந்துகொண்டே இருக்கிறது. பா.ஜ.கவின் பலம் பெருகிவருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் கொள்ளையடித்து ஆட்சி நடத்துபவர்கள் பொய்யான தகவல்களைக் கூறி மக்களைத் திசை திருப்புகின்றனர்,".

"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியாக இருந்தபோது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கொடுத்த நிதியைவிட கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகமான நிதியை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கொடுத்துள்ளோம்,".

"2004-2014 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. எனவே, தமிழகத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

 "நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என் நினைவுக்கு வந்தார். இலங்கையில் அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று அவர் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழ்நாட்டிற்கு நான் வந்திருக்கிறேன்.

  "பத்தாண்டு காலம் அவரது நல்லாட்சி காரணமாக சிறந்த கல்வியும் மருத்துவ வசதிகளும் கிடைத்தன. இதனால், இப்போதுவரை ஏழை மக்கள் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக புகழ்ந்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். குடும்ப அரசியலால் அரசியலுக்கு வரவில்லை. தனிப்பட்ட திறமையின் காரணமாக முதலமைச்சராக வந்தார்.

 "இன்று தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை அவமதிக்கும் விதமாக தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார். தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்நாட்டின் மக்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார்," என்றார்.

 தொடர்ந்து அவர் பேசுகையில், "இப்போது இண்டியா கூட்டணி உருவாகி உள்ளது. டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெறாது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக அந்த கூட்டணி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. 2024-இல் கொள்ளையடிக்க நினைக்கும் அந்தக் கடையை மூட வேண்டும்" என்று பேசினார் மோடி.

  தேர்தல் களத்தில் மூன்றாவது இடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் அதிமுக வை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவின் வாக்கு வங்கியை பாஜக அறுவடை செய்யவே இப்படி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மையப்படுத்தி மோடி பேசினார் என்று கருதப்படுகிறது.