தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளியில் பேசுவதற்கு செக்!

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளியில் பேசுவதற்கு  செக்!

ம.பா.கெஜராஜ்,

 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளியில் பேசுவதற்கு அரசு செக் வைத்திருக்கிறது. அந்த வகையில் பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சிகளையும் அனுமதி இன்றி நடத்த கூடாது என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

   சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட்28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்ட மகாவிஷ்ணு என்ற பேச்சாளர் பாவ - புண்ணிய பலன்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவை மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்றும் பேசினார்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கர் என்ற மாற்றுத் திறன் ஆசிரியருடன் மகாவிஷ்ணு வாக்குவாதமும் செய்து தன்னை பெரிய சொற்பொழிவாளரைப் போல காட்டிக் கொண்டார்.  

  இது தொடர்பான காட்சிகள், வலைதளங்களில் வெளியானகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைதொடர்ந்து   பல்வேறு மாணவர் அமைப்பினர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  எனவே பரபரத்த பள்ளிக்கல்வி துறை அசோக் நகர் அரசுப் பள்ளியில் 'கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவசரமாக ஏற்பாடு செய்து நடத்தியது.

  பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத் திறன் ஆசிரியர் சங்கருக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 நிகழ்ச்சி முடிந்தது, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியபோது, ''இந்த விவகாரம் தொடர்பாகபள்ளிக்கல்வி துறை இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீதுதுறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும்.

  என்னுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் அவரை பேச அனுமதித்ததாக கூறுவது தவறான செய்தி'' என்று சொன்னார்.

  நிகழ்ச்சிக்கு பிறகு, 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.தமிழரசி, திருவள்ளூர் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம், செங்கல்பட்டுஅணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசோக் நகர் பள்ளி ஆசிரியர்கள் நேற்று மதியம்வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் அறிந்துகொள்ள தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் நமது பாடநூல்களில் உள்ளன. எதிர்கால சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலை கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக் கூறமுடியும்.

  அதற்கு தேவையான புத்தாக்க பயிற்சியை துறைசார் வல்லுநர்களை கொண்டு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

   இதுதவிர, பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறை செய்வதற்கு, புதிய வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

   தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூகமேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி என்று பதிவிட்டிருக்கிறார்.

  மேலும், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும் காணொலியில் உடனடியாக ஆலோசனை நடத்தினார். ''பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் கல்வி சார்ந்து இயங்குபவர்களாக இருக்க வேண்டும்.

   துறை அனுமதியின்றி தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்களின் பயிற்சி முகாம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. சுற்றறிக்கைகூட சரியாக தயாரிக்க தெரியாத சிலரால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

  எனவே, அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்'' என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை 3 நாட்களில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த நிகழ்ச்சிகளையும் முறையான அனுமதி இன்றி நடத்த கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை செயலர் மதுமதியும் உத்தரவிட்டுள்ளார்.

  இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

  'பரம்பொருள்ஃபவுண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28-ம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவின்போது, மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில்பேசியுள்ளார்.

  எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படியும் மகாவிஷ்ணுவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில் வெளிநாடு சென்றிருந்த சர்ச்சைக்குரிய மகாவிஷ்ணு நான் எங்கும் ஓடிவிடவில்லை. சனிக்கிழமையன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வருகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த மகாவிஷ்ணு யார்?

மகாவிஷ்ணு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவராக இருந்த நாட்களிலேயே மேடைப் பேச்சில் ஆர்வமுடையவராக இருந்த அவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய 'அசத்தப் போவது யாரு?' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பரவலான அறிமுகத்தைப் பெற்றார்.

அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியில் கிடைத்த பெயரும் புகழும் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. பிறகு படங்களை இயக்க விரும்பி, கதைகளை எழுதினார். அதற்குப் பிறகு 'துருவங்கள் பதினாறு' படத்தை கேரளாவில் விநியோகம் செய்தார்.

"இதற்குப் பிறகு படம் ஒன்றை இயக்கவும் முடிவு செய்தார்.

"ஆனால், அந்த முயற்சியில் வெற்றி ஏதும் கிடைக்காத நிலையில், தனது குருவான காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளால் ஆன்மீகப் பாதையை அவர் கண்டடைந்ததாக," அவரது 'பரம்பொருள் ஃபவுண்டேஷனின்' இணையதளம் குறிப்பிடுகிறது.

 இதற்குப் பிறகு தன்னை ஆன்மீகவாதியாக முன்னிறுத்திக்கொண்ட மகாவிஷ்ணு, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 'பரம்பொருள் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் யோகா நிகழ்ச்சிகள், உரைகள் ஆகியவற்றை நடத்தி வருகிறார் மகாவிஷ்ணு.