ஒரு லட்சம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற மூதாட்டி கைது!

ஒரு லட்சம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற மூதாட்டி கைது!

ம.டெல்லிராஜன்,

பிறந்து ஐந்தே நாளான பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்றதாக பெண் சித்த மருத்துவ மூதாட்டி

 பிடிபட்டார். அவர் கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.   

   கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சொக்கநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் பிறந்து 5 நாளே ஆன குழந்தை ஒன்று இருந்தது.

  இதுகுறித்து அப்பகுதியினர் கடலூரில் உள்ள சைல்ட்லைன் அமைப்பிற்கு புகார் செய்தனர். பின்னர் அவர்கள் வந்து விசாரித்தபோது அந்த குழந்தையை ரூ.1 லட்சம் கொடுத்து அந்தப் பெண்ணின் உறவினர் வாங்கியது தெரியவந்தது.

 பின்னர் குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் கடலூர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணியாளர் சித்ராவதி, சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் குழந்தையை விற்ற கடலூர் மாவட்டம், வடலூர், புதுத்தெருவைச் சேர்ந்த சித்த மருத்துவரான சத்யபிரியா என்கிற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.    

   சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது, பிரசவம் பார்ப்பது போன்ற பணிகளை செய்து வந்த சித்த மருத்துவர் சத்யபிரியா, தவறான உறவினால் கருத்தரித்து சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணின் குழந்தையைதான் சொக்கநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

  அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், சத்யபிரியாவை கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  சித்த மருத்துவரான சத்யப்பிரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடலூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்தபோது அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக இவர் மீது வழக்கு பதிவாகி, விசாரணை நடந்து வருவது தெரியவந்தது.

  மேலும் போலீசார் பரிந்துரையின்பேரில், சத்யபிரியாவின் கிளினிக்கில் மருத்துவ குழுவினர் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த சிரிஞ்சுகள், ஊசிகள், கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கைப்பற்றினர்.

சித்த மருத்துவரான இவர் ஊசி, மருந்து மாத்திரைகளை விதிகளை மீறி சிகிச்சைக்காக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இவரது கிளினிக்கில் பிரசவம் பார்ப்பதற்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் மேஜை ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.