ஆளுநரின் துணைசெயலாளர் அளித்த புகாருக்கு டிஜிபி மறுப்பு! பொய் புகாரென நாசூக்காக சுட்டிக்காட்டும் செய்திக்குறிப்பு!

ஆளுநரின் துணைசெயலாளர் அளித்த புகாருக்கு டிஜிபி மறுப்பு! பொய் புகாரென நாசூக்காக சுட்டிக்காட்டும் செய்திக்குறிப்பு!

ம.பா.கெஜராஜ்,

இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42) கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய 4 பாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார்படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முற்பட்டபோது, ஆளுநர் மாளிகை வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழக போலீஸாரால் தடுக்கப்பட்டார்.

 அவர் கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்துக்கு எதிரே சற்று தூரத்திலிருந்து 2 பாட்டில்களை வீசினார். அவை ஆளுநர் மாளிகையின் அருகே சர்தார் படேல் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது.

 பின்னர், அவர் ஆளுநர் மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில், பாதுகாப்பு போலீஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

   கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார். தற்போது அவர் கிண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் இதேபோல் 3 இடங்களில் வீசியுள்ளார். அந்த வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சுமற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு, 25.10.2023-ல் ஆளுநரின் துணைச் செயலாளரான மருத்துவர் செங்கோட்டையன் ¢ புகார் அளித்துள்ளார்.

  25.10.2023-ல் நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார்படேல் சாலையில் நடத்தப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர்மாளிகை வாயிற் காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும்அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

அதேபோல் ஏப்ரல் 19, 2022-ல் மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது.

ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்குகூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன.

இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு73 பேர் கைது செய்யப்பட்டனர்.

  மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்துக்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன. மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

   மேலே குறிப்பிட்டுள்ளதுபோல எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்புக்காக சர்தார்படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன்இருந்த காரணத்தாலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

  மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். ஆளுநருக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்று விளக்கமாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

  ஆளுநரின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் அளித்திருப்பது பொய் புகார் என்பதை டிஜிபி அவர்கள் தனது அறிக்கையில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

   ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் நடந்த போது இப்படியெல்லாம் நடக்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், வீண்பழி போடுவார்கள் என்று முதலமைச்சர் முகஸ்டாலின் தெரிவித்திருந்ததை இந்த இடத்தில் நினைவுபடுத்திபார்த்தால் எல்லாம் புரியும்.