ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்!

ஜி.கே.சேகரன்,
ரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைத்து விற்பனைக்காக வைத்திருந்த ஒன்னரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள்.
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் மாங்காய் மண்டி என்கின்ற பெயரில் மாம்பழம் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பகுதியில் மொத்தம் 22 பழக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்த மாம்பழங்கள் விற்பனை செய்யும் ஏழு கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கடைகளில் ரசாயனங்களைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக வேலூர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆகவே, இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது ரசாயனங்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் ஒன்றரை டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுபோன்று செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.
இந்த சோதனை நடந்து கொண்டிருந்தபோது சிபாரிசுக்காக சிலர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கையை கைவிடுங்கள் என்று அன்பு கலந்த மிரட்டலோடு கேட்டுக் கொண்டார்களாம்.