அதிமுகவுக்கா நானா? பலமாக தலையாட்டி மறுத்துள்ளார் சுப்புலட்சுமி!

ஜி.சாந்தகுமார்,
40 ஆண்டுகால அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்க முடிவெடுத்துவிட்டார் சுப்புலட்சுமி ஜெகதீசன். இப்படிதான் ஒரு செய்தி சமீபத்தில் கசிந்தது.
அதிமுக. தமிழக அமைச்சர், மத்திய இணையமைச்சர் என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அந்த அம்மையார், ஈரோடு திமுகவின் முகமாய் செயல்பட்டு வந்து 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஆனாலும் திமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தார்.
இருந்த போதும் அவர் டம்மியாவே வைக்கப்பட்டிருந்ததாக அவரும், அவரது கணவர் ஜெகதீசனும் உணர்ந்து அதை சோஷியல் மீடியா வழியாக தலைமைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இதனால் இன்னும் ஓரமாக வைக்கப்பட்டார் அம்மையார்.
இந்த சூழலில் அரசியலில் இருந்து ஓய்வு என்று அறிக்கை ஒன்று வெளியாகி தமிழக அரசியலில் பட்டையை கிளப்பியது. அந்த அறிக்கையில், திமுகவின் வெற்றியும், முதல்வராக மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளும் மன நிறைவை தருவதாக தெரிவித்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன்.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே இதுதொடர்பான கடிதத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அளித்து விட்டேன் என்று செப்டம்பர் 20ல் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணையப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தொடக்கத்தில் அதிமுகவில் தான் இருந்தார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம்பிடித்தவர்.
ஆகவே மீண்டும் அதிமுகவிற்கு செல்வதில் தவறு ஏதும் இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த கூற்றை பலமாக தலையாட்டி மறுத்திருக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.