டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர்! ஆட்சியர் உத்தரவை கேட்காத மாநகராட்சி அலுவலர்கள்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக முன்னறிவிப்பின்றி பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இரவோடு இரவாக சாலைகளில் ஆங்காங்கே ஏற்படுத்தப்படும் பள்ளங்களினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
அந்த வகையில், வேலூர் மாங்கனி மண்டி எதிரில் மாநகராட்சி இரவோடு இரவாக தோண்டிய பள்ளத்தில், இரண்டு சக்கர வாகனத்தோடு ஒரு நபர் விழுந்தார்.
அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே தடுப்புகள் அமைக்காமல் அறிவிப்பு பலகை ஏதும் வைக்காததால் இந்த விபத்து நடந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கிறனர்.
குறிப்பு:- கடந்த வாரம் கூட மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் பணி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க சொல்லி ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழுத்தம் தரவில்லை என்று ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி வேலூர் மாநகர ஆணையரிடமும் கோபமாக கடிந்து கொண்டார்.
ஒப்பந்ததாரரையும் அழைத்து செம டோஸ் கொடுத்தார்.
கலெக்டர் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில்¢ கூறும் பொழுது யாராவது வாகனத்தில் வருபவர்கள் தவறி இந்த பள்ளத்தில் விழுந்து, ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு? என்ன ஆவது. இதையெல்லாம் யோசித்து உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சென்றார்.
ஆனாலும் வழக்கம் போலவே மெத்தனம் காட்டிய மாநகராட்சி நிர்வாகத்தின் போக்கால் தற்போது ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக ஆட்சியர் அவர்கள் அச்சப்பட்டதைப் போலவே, மாநகராட்சி ஏற்படுத்திய திடீர் பள்ளத்தில் வாகனத்தோடு ஒருவர் விழுந்துவிட்டார்.
இதற்கு அப்புறமாவது மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளப்படுமா?என்று மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.