இன்று 96 தொகுதிகளில் 4 ஆம் கட்டத் தேர்தல்! வாக்குபதிவு தொடங்கியது!

இன்று 96 தொகுதிகளில் 4 ஆம் கட்டத் தேர்தல்! வாக்குபதிவு தொடங்கியது!

ம.பா.கெஜராஜ்,

 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் இன்று மே-13 திங்கட்கிழமை நான்காம் கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது.

 நான்காம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் மொத்தம் 543 தொகுதிகளில் 379 மக்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது.

 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியற்றில் மொத்தம் 96 தொகுதிகளில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் ஃபீல்டில் உள்ளார்கள்.

 தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம்தேதி நடைபெற்ற தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம்தேதி நடைபெற்ற 2ஆம் கட்ட தேர்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவானது. 3ஆம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில், 65.68 சதவீத வாக்குகள் பதிவாகின.

எந்ததெந்த மாநிலம்

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

   ஆந்திராவில் உள்ள 175 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியானது பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை ஒரு அணியாக போட்டியிடுகின்றன.

 ஒடிசா மாநிலத்தில் 4 தொகுதிகள், பீகார் 5, ஜார்க்கண்ட் 4, மத்திய பிரதேசம் 8, மகாராஷ்டிரா 11, உத்தர பிரதேசம் 13, மேற்கு வங்கம் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

  ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 ஆக மொத்தம் நான்காம் கட்ட வாக்குபதிவுகளுக்கு பின்னர் ஆட்சிக்கட்டிலில் யாருக்கு இடம் என்பது மிகத் தெளிவாக தெரிந்துவிடும் என்றே வடமாநில சோஷியல் மீடியாக்கள் அலசிக்கொண்டிருக்கின்றன.