16 வயது சிறுமிகளை ஓட ஓட விரட்டிய இளைஞர்கள்! வழியனுப்பி வைத்த போலிசார்! எதற்காக தெரியுமா?
ம.பா.கெஜராஜ்,
16 வயது மதிக்கத்தக்க எட்டு சிறுமிகளை சில இளைஞர்கள் ஓட ஓட விரட்டிக் கொண்டு வந்த நிலையில், அவர்களை மனித உரிமை காப்பாளர்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் தமிழகத்தின் வேலூர் மாவட்டம், காட்பாடி எல்லையில் உள்ளது.
இந்த குடிபாலா மண்டலத்தில் மாம்பழத்திலிருந்து சாறு எடுத்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன.
அவற்றில் பணிபுரிவதற்காக தமிழகத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கூலி தொழிலாளிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவர்கள் குத்தகை அடிப்படையிலும், தின கூலி அடிப்படையிலும் பணியமர்த்தப் படுகின்றனர்.
அதே போல், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் குத்தகை அடிப்படையில் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களில் 14 வயது முதல் 16 வயது பெண்களும் அடக்கம்.
அப்படி இருக்க, கடந்த 20 ஆம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் வேலூரை சேர்ந்த மனித உரிமை காப்பாளர்கள் ஈஸ்வரன் மற்றும் சானாவாஸ் என்பவர்கள் சித்தூரில் இருந்து வேலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கொத்தபள்ளி கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் சிலரை வாலிபர்கள் விரட்டிக் கொண்டு வந்தனர். அந்த சிறுமிகள் அலறி அடித்து அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடினர்.
அப்போது சிறுமிகளை தடுத்து நிறுத்திய மனித உரிமை காப்பாளர்கள் அவர்களிடம் விசாரித்த போது, அக்கம்பக்கம் இருந்தவர்களும் கூடி விட்டனர்.
கூட்டம் கூடியதை பார்த்ததும் சிறுமிகளை துரத்தி வந்த வாலிபர்கள் சிறுமிகளை விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
அங்கு கூடிய மக்களிடம் அந்த சிறுமிகள் தெரிவிக்கையில், நாங்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். எங்களை இங்கு உள்ள "டாசா" என்கின்ற பழத்தொழிற் சாலையில் பணிபுரிவதற்காக இடைத்தரகர்கள் அழைத்து வந்தனர்.
ஆனால் எங்களுக்கு இந்த தொழிற்சாலையில் பணிபுரிய பிடிக்கவில்லை. இங்கு உள்ள சூழ்நிலை சரியில்லை எங்களுக்கு கூலியும் கொடுக்கவில்லை. நாங்கள் சொல்ல இயலாத அளவுக்கு அங்கு கொடுமைகள் நடந்தன.
அதிகப்படியான வேலை வாங்குகிறார்கள், ஆகவே எங்களை ஊருக்கே திருப்பி அனுப்பி விடுங்கள் என்று கேட்டதற்கு அந்த நிர்வாகத்தினர் அனுப்ப மறுத்ததால் நாங்கள் தப்பித்து ஓடி வந்தோம்.
எங்களை தப்ப விடாமல் மடக்கி பிடிக்க அந்த நிர்வாகத்தில் இருந்த அடியாட்கள் எங்களை விரட்டினர், நல்ல வேலையாக நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள் என்று கதறி அழுதனர். அதைப் பார்த்த மனித உரிமை காப்பாளர்கள் அவர்களை ஒரு டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு குடிபாலா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அத்துடன் பட்டினி மயக்கத்தில் இருந்த சிறுமிகளுக்கு ரொட்டி உள்ளிட்ட உணவுகளை வாங்கி கொடுத்தனர்.
காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் விவரத்தை அறிந்து அந்த தொழிற்சாலையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அந்த எட்டு சிறுமிகளையும் அதிகாலை 3 மணிக்கு சித்தூர் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
குறைந்த பட்சம் அந்த சிறுமிகளை துரத்தியவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கவில்லை. அவர்களுக்கு மருத்துவ சோதனை எதையும் செய்யவில்லை. இதுபோல குடிபாலா மண்டலத்தில் உள்ள பல தொழிற்சாலைகளில் விரும்பத்தகாத செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல கூலி தொழிலாளிகளை குறிப்பாக பெண் தொழிலாளிகளை குத்தகை அடிப்படையில் அழைத்து வந்து பணி செய்ய வைக்கிறார்கள்.
இது குறித்து கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் சுசிலா என்பவர்கள் தெரிவிக்கையில் எங்களை தாமோதரன் என்கின்ற இடைத்தரகர் இங்கு அழைத்து வந்து சேர்த்தார்.
நாங்கள் சீசன் நேரத்தில் இங்கு வேலைக்கு வருவோம், எங்களை இங்கேயே தங்க வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
அவர்களை தங்க வைத்த இடத்தைப் பார்த்த போது ஆடு மாடுகளை அடைத்துவைக்கும் பட்டி போல இருந்தது. இப்படி அடிமைகளாக அழைத்து வரப்படுவர்களுடன் அவர்களது சிறுவயது குழந்தைகளும் வந்துவிடுகின்றனர்.
அதே போல் வேலூர் வடுகன்தாங்கல் மற்றும் லத்தேரி ஆகிய பகுதிகளில் இருந்து, இது போன்ற பழ தொழிற்சாலைக்கு பணிக்கு வரும் பெண்கள் தெரிவிக்கையில், தமிழகத்தில் சேலம், அரூர் திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாங்கனி நன்கு விளைச்சல் இருக்கிறது. ஆகவே வேலூர் பகுதியில் ஒரு மாங்கனி தொழிற்சாலை அமைத்தால் நாங்கள் ஏன் இப்படி கஷ்டப்பட போகிறோம்.
எங்களை தினந்தோறும் கம்பெனி வண்டியிலேயே அழைத்துச் சென்று வருகிறார்கள். ஒரு மினி வேனில் சுமார் 50 பேரை ஆடு மாடுகளை போல் கும்பல் கும்பலாக அடைத்து அழைத்துச் செல்கின்றனர் என்று சொன்னார்கள்.
இது குறித்து டாசா மாம்பழ சாறு தொழிற்சாலையில் சூப்ரவைசர் முரளியிடம் பேசிய போது, தமிழ்நாட்டிலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்ட பகுதியினர் இங்கு வேலைக்கு வருவதைப் போலவே மத்திய பிரதேசத்தில் இருந்தும் சுமார் 50 பெண்கள் வந்து தங்கியிருந்தனர். பல ஆண்டுகளாக இப்படி அழைத்து வருகிறோம், அவர்களை வேலைக்கு அழைத்து வருவதற்காகவே ஆட்கள் உள்ளனர். (இடைத்தரகர்கள்).
தற்போது இந்த பெண்களுக்கு வேலை பிடிக்கவில்லை என்பதால் அவர்களை அழைத்து வந்தவர்களிடமே ஒப்படைக்கலாம் என்று இருந்தோம். ஆனால் அவர்கள் எங்களிடம் சொல்லாமல் அந்த எட்டு பேர் தப்பி சென்றனர்.
அவர்களை எங்கள் கம்பெனி ஆட்கள் தான் விரட்டி பிடித்துவர சென்றனர். அதற்குள் போலிசுக்கு போய்விட்டனர். பின்னர் போலிசார் உதவியுடன் நாங்கள் தான் ரயிலில் ஏற்றி அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தோம் என்றார் கூலாக. அதே கருத்தைத்தான் மேலாளர் சபியும் சொன்னார்.
சிறுமிகளை காப்பாற்ற காரணமாக இருந்த மனித உரிமை காப்பாளர் வி.ஜெ.ஈஸ்வரன் தெரிவிக்கையில். பட்டபகலில் தேசிய நெடுஞ்சாலையில் சிறுமிகளை துரத்தும் சம்பவம் ஏற்புடையது அல்ல. இதை அறிந்த காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை வழியனுப்பிவைத்து பிரச்சனையை மூடி மறைக்க பார்ப்பது சரியல்ல. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளாரும் தலையிட்டு சம்மந்தப்பட்ட டாசா மாம்பழத் தொழிற்சாலை, மற்றும் குடிபாலா மண்டலத்தில் இயங்கும் மாம்பழ சாறு தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்த வேண்டும்.
இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் சார். தமிழக எல்லையோரம் இருக்கும் ஆந்திர பகுதியில் நிறைய மாம்பழ தொழிற்சாலைகள் உள்ளன. மாம்பழ சீசன் நேரங்களில் அவற்றில் பணிபுரிவதற்காக தமிழ்நாட்டு மற்றும் வடக்கு மாநிலங்களிலிருந்து குத்தகைக்கு ஆட்களை அழைத்து வருகிறார்கள். அதற்காகவே புரோக்கர்கள் உள்ளனர்.
"ஆன்லைன் மூலமாகவும் மனிதர்கள் வாடகைக்கு எடுப்பதாக கூறுகின்றனர். அங்கு அடைத்து வைத்து வேலை வாங்கப்படும் பெண்களுக்கு உண்டான பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும். மருத்துவ சிகிச்சை, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்".
இந்த சம்பவம் குறித்து குடிபாலா காவல் நிலைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முற்பட்ட போது எவரும் முறையாக பதில் சொல்லவில்லை. குறிப்பாக நாங்கள் இது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை நீங்கள் எதற்காக இதை கிளறுகிறீர்கள் என்று கேட்டு, விளக்கம் அளிக்க மறுத்தனர்.
எனவே இது தொடர்பாக சித்தூர் மாவட்ட எஸ்.பி. மணிகண்டன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவருக்கு இது பற்றின விஷயம் எதுவுமே அவருக்கு தெரியவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் குடிபாலா காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆந்திர முதல்வர் மற்றும் சித்தூர் கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கு புகார் அளிக்கப்படவிருக்கிறது.