சார்பதிவாளர் கயல்விழி மீது நடவடிக்கை எடுங்கள்! மறுத்தால் அலுவலகத்தை பூட்டுவோம்! பொங்கி எழுந்த கட்சியினர்!

கு.அசோக்,
கலவை சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்வதோடு சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் சார்பதிவாளர் கயல்விழியின் அலுவலக நிர்வாக சீர்கேடு மற்றும் பொதுமக்களை அலைக்கழிக்கும் அராஜக ஆணவப் போக்கை கடித்து அதிமுக, பாமக, விசிக சி.பி. எம், சி.பி.ஐ, பொதுநலச் சங்கம் என அனைத்து கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30 வருடங்களுக்கு முன் கலவை சுற்றியுள்ள ஏழை எளிய ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டாவை வைத்து பத்திரப்பதிவு மேற்கொள்ள மறுத்து வருவதை குறித்து கண்டிக்கப்பட்டது.
மேலும் வருவாய்த்துறை அளித்த பட்டாவின் மீது நம்பிக்கை இல்லாமல் மெய்தன்மை சான்று கேட்டு பொதுமக்களை மாதக்கணக்கில் அலைக்கழிக்கும் அதிகாரத் திமிரைக் கண்டித்தும், நேர்மை நேர்மை என்று மாலை 6 மணிக்கு மேல் புரோக்கரை வரவைத்து ஏழை வயிற்றில் அடித்து கழிவறைக்கு அருகே கல்லா கட்டும் சார்பதிவாளரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஏழை மக்களுக்கு ஒரு பத்திரப்பதிவும் பணக்கார மக்களுக்கு ஒரு பத்திரப்பதிவு என பாகுபாடு காட்டும் நவீன தீண்டாமையை கண்டித்தும், ஆமைப்போல் செயல்படும் நிர்வாக உள்ளிட்ட கண்டனத்தை முன் வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் சார்பதிவாளர் கயல்விழி மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியிட நீக்கம் செய்யாவிட்டால் பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்பதையும் அவரின் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கண்டன பேருரையில் முழக்கம் செய்தனர்.